ஒக்கலிகா மடாதிபதியால் அவமானம்.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்க.. சித்தராமையாவுக்கு பாஜக அட்வைஸ்!
பெங்களூர்: அரசு விழாவில் ஒக்கலிகா ஜாதி மடாதிபதியால் அவமதிக்கப்பட்ட முதல்வர் சித்தராமையா இனியும் அப்பதவியில் நீடிக்காமல் ராஜினாமா செய்ய வேண்டும் என கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் வலியுறுத்தி உள்ளார். கர்நாடகா அரசின் கெம்பே கவுடா ஜெயந்தி விழாவில் பேசிய ஒக்கலிகா ஜாதி மடாதிபதி சந்திரசேகர சுவாமி, முதல்வர் பதவியை சித்தராமையா, டிகே சிவகுமாருக்கு விட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தியதுதான் சர்ச்சைக்கு காரணம்.
கர்நாடகா அரசின் கன்னட மொழி வளர்ச்சித் துறை சார்பில் பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடாவின் 515-வது ஜெயந்தி விழா பெங்களூரில் நடைபெற்றது. இதில் பேசிய ஒக்கலிகா ஜாதி மடாதிபதி சந்திரசேகர சுவாமி, முதல்வர் சித்தராமையா முதல்வர் பதவியை ஏற்கனவே அனுபவித்தவர். ஆகையால் இனி டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டும். அப்படி செய்வதுதான் சித்தராமையாவுக்கும் நல்லது. முதல்வர் பதவியை டிகே சிவகுமார் அனுபவிக்கவில்லை. அதனால்தான் டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவியை தர வேண்டும் என்கிறோம் என்றார்.

ஒக்கலிகா ஜாதி மடாதிபதி சந்திரசேகர சுவாமியின் இந்தப் பேச்சு சித்தராமையா ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. பேசிய ஒக்கலிகா ஜாதி மடாதிபதி சந்திரசேகர சுவாமிக்கு சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பாஜகவும் களமிறங்கி இருக்கிறது. பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அசோக் குமார், ஒக்கலிகா மடாதிபதியை டிகே சிவகுமார்தான் தூண்டிவிட்டு பேச வைத்திருக்கிறார். அரசு விழா மேடையிலேயே சித்தராமையா அவமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் புறநகர் லோக்சபா தொகுதியில் டிகே சிவகுமாரின் தம்பி தோல்வி அடைய யார் காரணம் என்பது டிகே சிவகுமாருக்கு தெரியும். மடாதிபதிகளை தமக்கு ஆதரவாக பேசவைப்பது டிகே சிவகுமாரின் அரசியல் தந்திரம். கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் சித்தராமையா கோஷ்டி தனியாகவும் டிகே சிவகுமார் கோஷ்டி தனியாகவும் செயல்படுகிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது கர்நாடகா அரசுக்கு ஆபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மேலும் முதல்வர் பதவியில் சித்தராமையா நீடிக்க வேண்டாம். முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும். அரசு விழாவில் இத்தகைய அவமானத்தை யாரும் சந்தித்ததும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications