தமிழ்நாட்டுக்கு சொட்டு காவிரி நீர் கூட தரவே கூடாது.. ‘அண்ணாமலை’யின் கர்நாடகா பாஜக அடாவடி கடிதம்!
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு அம்மாநில முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை கடிதம் அனுப்பி இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிதான் காங்கிரஸ். இருந்த போதும் காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து தீர்வு காண்பதற்கு ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் நீதி வழங்காத போது உச்சநீதிமன்றத்தை நாட முடியும். இதனைத்தான் தமிழ்நாட்டில் தற்போது ஆளும் திமுக அரசு கொள்கையாக கடைபிடித்து வருகிறது.

கர்நாடகாவில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் ஆகஸ்ட் 9-ந் தேதி வரை 15 டிஎம்சி நீரைத்தான் அம்மாநிலம் காவிரியில் திறந்துவிட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்பட வேண்டிய நீரின் அளவு 53 டிஎம்சி. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் வலியுறுத்தினர். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் சொற்ப நீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதற்கு எதிராக வெளிநடப்பு செய்தனர் தமிழ்நாடு அதிகாரிகள்.

தற்போது உச்சநீதிமன்றத்திலும் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று வழக்கு தொடர்ந்த நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு கர்நாடகா பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் பசவராஜ் பொம்மை என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போதுதான், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா அடம்பிடித்தது. இதற்காக பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications