தமிழ்நாட்டுக்கு எதிராக உக்கிரமாக களமிறங்கிய கர்நாடகா பாஜக! காவிரி யாத்திரை நடத்தப் போவதாக அறிவிப்பு!
பெங்களூர்: காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடகா பாஜக தீவிரமாக இறங்கி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து காவிரி பாதுகாப்பு யாத்திரை நடத்தப்படும் என அம்மாநில பாஜக அறிவித்துள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை. தமிழ்நாடு அரசும் காவிரி நீரைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வரும் 21-ந் தேதி காவிரி நதிநீர் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

கர்நாடகாவைப் பொறுத்தவரையில் வறட்சி நிலவுவதாக பஞ்சப் பாட்டு பாடுகிறது. ஆனால் தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன், கையளவு காவிரி நீர் இருந்தாலும் அதை பங்கீட்டுக் கொள்வதுதான் முறையானது என சுட்டிக் காட்டியுள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் தரவே கூடாது என்பதில் உறுதியாக உள்ளன.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்கக் கூடாது என கர்நாடகா பாஜகதான் முதன் முதலில் போராட்டத்தை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கன்னட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டுக் காவிரி நீர் திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி காவிரி பாதுகாப்பு யாத்திரை நடத்தப் போவதாக கர்நாடகா பாஜக அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி பாயும் மாவட்டங்களில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் காவிரி பாதுகாப்பு யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளது பாஜக என்று அம்மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
மேலும், கர்நாடகா முதல்வர் சித்தராமையா தமிழ்நாட்டுக்கான முதல்வர் போல செயல்படுகிறார்; தமிழ்நாட்டுக்கு நலன் கருதி காவிரி நீரை திறந்துவிடுகிறார். இது கன்னட மக்களுக்கு செய்கிற துரோகம் என்றும் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications