பெங்களூர் நிறுவனங்களில் இனி 50 - 75 சதவீத பணி கன்னடர்களுக்கு தான்.. கர்நாடகா மசோதாவுக்கு ஒப்புதல்
பெங்களூரு: பெங்களூர் உள்பட கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நிர்வாக பிரிவில் 50 சதவீத பணியும், நிர்வாகம் அல்லாத பிரிவில் 75 சதவீத பணிகளும் கன்னடம் தெரிந்த உள்ளூர்காரர்களுக்கு தான் பணி வழங்க கோரும் மசோதாவுக்கு கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் கர்நாடகாவில் செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதற்காக அரசு சார்பில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

இந்த கோரிக்கை எழுவதற்கு முக்கிய காரணம் பெங்களூராகும். ஏனென்றால் பெங்களூரில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் அங்கு வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம் வேலை செய்கின்றனர். கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை என தொடர்ந்து கன்னட அமைப்பினர் கூறி வருவதோடு, அத்தகைய தொழிற்சாலை, நிறுவனங்களில் கன்னட மொழி புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் கூட கர்நாடாகாவில் அரசு மற்றும் தனியார் துறை வேலைகளில் கன்னடர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். இதற்காக பிரத்யேக இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கன்னட அமைப்பினர் போராட்டம், பேரணியில் ஈடுபட்டனர். அதோடு கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு பரிந்துரைக்கும் சரோஜினி மகிஷி அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தினர்.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கன்னடம் தெரிந்த கர்நடாகாவை சேர்ந்தவர்களுக்கு பணி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் கர்நாடகாவில் தொழிற்சாலை, நிறுவனங்கள் உள்பட பிற வணிகம் சார்ந்த அமைப்புகளில் உள்ளூர்காரர்களை பணியமர்த்தும் மசோதா 2024 (The Karnataka State Employment of Local Candidates in the Industries, Factories and Other Establishments Bill, 2024) என்பதை கொண்டு வந்தது. இந்த மசோதாவானது முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூர் விதானசவுதாவில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து இந்த மசோதா கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றி சட்டமாக்கப்படும்போது பெங்களூர் உள்பட கர்நாடகா முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் கன்னடம் தெரிந்த கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு இடஒதுக்கீடு போன்ற சலுகை கிடைக்கும். இந்த மசோதாவின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:
* கர்நாடகாவில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் நிர்வாக பணியில் 50 சதவீத பேரும், நிர்வாகம் அல்லாத பணிகளில் 75 சதவீதம் பேரும் கன்னடம் தெரிந்த கர்நாடகாவை சேர்ந்தவரை கட்டாயம் நியமிக்க வேண்டும்.
* இந்த மசோதாவின்படி கர்நாடகாவில் பிறந்தவர் இயல்பாகவே அந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பார். மாறாக மற்ற மாநிலத்தவர்கள் என்றால் அவர்கள் 15 ஆண்டுகள் கர்நாடகாவில் வசிப்பதோடு, கன்னடத்தை தெளிவாக பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
* மேலும் அவர்கள் கன்னடத்தை ஒரு மொழியாக கொண்ட மேல்நிலைப் பள்ளி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கர்நாடக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நோடல் ஏஜென்சியால் குறிப்பிடப்பட்ட கன்னட புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
* ஒருவேளை தகுதியான உள்ளூர் நபர்கள் கிடைக்காவிட்டால் அந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அரசாங்கத்துடன் இணை்நது உள்ளூர் நபர்களுக்கு 3 ஆண்டு பயிற்சி வழங்கி பணியில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த காலக்கட்டத்தில் நிறுவனங்கள் தளர்வு பெறவும் முடியும். இருப்பினும் கூட குறைந்தபட்சம் நிர்வாக பிரிவில் குறைந்தபட்சம் 25 சதவீதம் உள்ளூர்காரர்களும், நிர்வாகம் இல்லாத பிரிவில் உள்ளூர் நபர்கள் 50 சதவீதமாகவும் நியமிக்கப்பட வேண்டும். இதனை மீறினால் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்பன போன்ற விபரங்கள் மசோதாவில் அடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications