தீண்டாமை.. கலப்பு திருமணம் செய்தது குத்தமா? தம்பதிக்கு கொடுத்த கொடூர தண்டனை.. ஷாக்கில் கர்நாடகா
வெவ்வேறு சாதியை சேர்ந்த கோவிந்தராஜூ-ஸ்வேதா காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
பெங்களூர்: அண்டை மாநிலமான கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தில் பட்டியலின பெண்ணை கலப்பு திருமணம் செய்த வாலிபரை பஞ்சாயத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளளது. ஊரில் யாரிடமும் பேசக்கூடாது. கடைகளில் பொருட்கள் வழங்க கூடாது. தண்ணீர் எடுக்க கூடாது எனக்கூறியுள்ளதோடு ரூ.6 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதற்கு பலன் கிடைத்து வரும் நிலையில் அவ்வப்போது ஆங்காங்கே சாதிய வன்மத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் பட்டியலின பெண்ணை கரம்பிடித்த இளைஞருக்கு அவர் வசிக்கம் கிராம பஞ்சாயத்து விசித்திரமான தீர்ப்பை கூறி ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

கலப்பு திருமணம்
சாம்ராஜநகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே குணஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜூ. மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹூவினகொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இருப்பினும் 2 பேரும் காதலித்தனர். இதையடுத்து கடந்த 5 ஆண்டுக்கு முன்பு இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை அவர்கள் மண்டியா மாவட்டம் மலவள்ளியில் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டனர்.

சொந்த கிராமத்துக்கு வருகை
மேலும் கோவிந்தராஜூ தனது காதல் மனைவி ஸ்வேதாவுடன் மலவள்ளியில் வீடு எடுத்து தங்கி அங்கேயே வேலையும் செய்ய தொடங்கினார். அவ்வப்போது ஸ்வேதாவுடன் கோவிந்தராஜூ தனது சொந்த கிராமமான குணஹள்ளிக்கு வந்து சென்றார். இந்நிலையில் தான் கோவிந்தராஜூ தனது சாதியை விட்டுவிட்டு பட்டியலின பிரிவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ள விஷயம் அந்த கிராம மக்களுக்கு தெரியவந்தது.

ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு
இதுபற்றி அவர்கள் பஞ்சாயத்திடம் புகார் அளித்தனர். பஞ்சாயத்து தலைவர்கள் கூடி தீர்ப்பு வழங்கினர். அப்போது வேறு சாதி பெண்ணை திருமணம் செய்தால் கிராமத்தை சேர்ந்தவர்களுடன் பேசக்கூடாது. கடைகளில் அரிசி, காய்கறி, பால் உள்ளிட்டவை வழங்கக்கூடாது. குடிநீர் எடுக்கவும் அனுமதியில்லை எனக்கூறி கோவிந்தராஜை கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைத்தனர்.

ரூ.6 லட்சம் அபராதம்
மேலும் தவறு செய்தாதக கூறி ரூ.3 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என பஞ்சாயத்து உத்தரவிட்டது. இதனை மார்ச் 1ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றனர். அதோடு அபராதம் செலுத்தினாலும் கூட கலப்பு திருமண தம்பதிக்கு கிராமத்துக்குள் நுழைய அனுமதியில்லை என தெரிவித்துள்ளனர். இதுபற்றி துணை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் பற்றி அறிந்த பஞ்சாயத்து கூடுதலாக ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனர். இதனால் தற்போது ரூ.6 லட்சமாக அபராதத்தை உயர்த்தி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications