எடியூரப்பா என்ன செய்கிறார்... ஆட்சி கவிழும் அபாயம்... கர்நாடகா விரைகிறார் முதல்வர் குமாரசாமி
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் கூட்டணி கட்சி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் குமாரசாமி இன்று கர்நாடகா விரைகிறார்
மறுபுறம், கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், டெல்லியில் இருந்து பெங்களூரு விரைகிறார்.
கர்நாடகாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 39 இடங்களை பெற்ற மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதனிடையே, ராமலிங்கரெட்டி, ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட கர்நாடகாவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதே போல், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும், அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், 11 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் கொடுத்தனர். தற்போது வரை இந்த கூட்டணி ஆட்சியில் இருந்து 11 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்துள்ளனர்.
மேலும் 2 பேர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சபாநாயகரை சந்தித்த பிறகு, 11 எம்.எல்.ஏக்களும் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடித நகல்களை வழங்கியுள்ளனர்.ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டால், ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் குமாரசாமி, அமெரிக்கா சென்றுள்ள நிலையில், கர்நாடகாவில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. பத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால் ஆட்சி கவிழும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சியை தக்க வைக்க, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, அமைச்சர் சிவகுமார் எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதே சமயம், பாஜகவின் எடியூரப்பா, ஆட்சி அமைக்கும் வேலைகளில் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.