ஆட்கொல்லி புலி! பலியாகும் மனித உயிர்கள்! பந்திப்பூர் வனப்பகுதியில் சஃபாரி, மலையேற்றத்திற்கு தடை
பெங்களூர்: பந்திப்பூர் பகுதியில், மனிதர்களை புலி தாக்கும் சம்பவம் அதிகரித்திருப்பதால், கர்நாடகாவின் நாகர்ஹோலே மற்றும் பந்திப்பூர் வனப்பகுதிகளில் சஃபாரி செயல்பாடுகளுக்கும், மலையேற்றத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் புலியைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் அனைத்து வனத்துறை ஊழியர்களையும் ஈடுபடுத்த கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் பி. காண்ட்ரே உத்தரவிட்டிருக்கிறார்.

விவசாயி மரணம்
மைசூர் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆட்கொல்லி புலியின் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கிறது. இதுவரை மூன்று பேர் புலி அடித்து பலியாகியிருக்கிறார்கள். நேற்று சரகூர் தாலுகா, ஹலே ஹெகோடிலு கிராமத்தில் புலியின் தாக்குதலில் சிக்கி மூன்றாவது நபர் உயிரிழந்திருக்கிறார். இந்த கிராமத்தை சேர்ந்த 35 வயதான நாயக், நேற்று காலை வழக்கம்போல காட்டுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
சஃபாரி சேவைகள் நிறுத்தம்
எனவே உறவினர்கள் தேடியிருக்கின்றனர். நீண்ட தேடுதலுக்கு பின்னர் நாயக் உடல் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறது. புலி தாக்கியதால் விவசாயி உயிரிழந்திருப்பதை வனத்துறையினர் உறுதி செய்திருக்கின்றனர். விவசாயி உயிரிழப்பு கிராமத்து மக்களை ஆத்திரமடைய செய்திருக்கிறது. உடனடியாக ஆட்கொல்லி புலியை பிடிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே புலியை பிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவரை சஃபாரி சேவைகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், மலையேற்றம் யாரும் போக வேண்டாம் என்றும் வனத்துறை உத்தரவிட்டிருக்கிறது.
புலிகள் ஏற்படும் உயிரிழப்பு
நாடு முழுவதும் கடந்த 2020-2024 வரை புலி தாக்கியதில் 378 பேர் பலியாகியிருக்கின்றனர். இந்த 5 ஆண்டுகளில் 2022ம் ஆண்டுதான் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 2022ல் 110 பேர் பலியாகியுள்ளனர்.
2020ல் - 51 பேர்
2021ல் - 59 பேர்
2022ல் - 110 பேர்
2023ல் - 85 பேர்
2024ல் - 73 பேர்
புலி தாக்குதலில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் மகாராஷ்டிரா இருக்கிறது. இங்கு 5 ஆண்டுகளில் 218 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 2022ம் ஆண்டு மட்டும் 82 பேர் உயிரிழந்திருக்கின்றனர். உத்தரப்பிரதேசம் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 5 ஆண்டுகளில் 61 பேரும், அதிகபட்சமாக 2023ல் 25 பேரும் பலியாகியுள்ளனர்.
ஆட்கொல்லி புலிகள் என்றால் என்ன?
கர்நாடகாவை பொறுத்தவரை தற்போது புலியால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் ஆட்கொல்லி புலிகள்தான். வயதானவை, மீண்டும் வேட்டையாட முடியாத அளவுக்கு அடிப்பட்ட புலிகள்தான் ஆட்கொல்லியாக மாறுகின்றன. அல்லது காடுகளில் சடலங்கள் சரியாக புதைக்கப்படாமல் போகும்போது அதை உண்ணும் புலிகள் மனித இறைச்சிக்கு பழகியிருக்கலாம். எனவேதான் எளிதான டார்கெட்டாக மனிதன் புலிக்கு தெரிகிறான். புலியும் ஆட்கொல்லியாக மாறுகிறது.
ஏன் புலிகள் மனிதர்களை வேட்டையாடுகிறது?
மனிதர்கள் வேட்டையாட எளிதான உணவாக புலிகளுக்கு தெரிந்தாலும், எல்லா புலிகளும் மனிதர்களை வேட்டையாடி ஆட்கொல்லியாக மாறுவது கிடையாது. காரணம், மனிதர்கள் ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்துகிறான் என்பதை புலிகள் காலங்காலமாக பார்த்து வந்திருக்கின்றன. மனிதர்களின் வித்தியாசமான நடத்தையும், கூட்டு நடவடிக்கையும் புலிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். எனவே இயல்பாகவே மனிதர்களை பார்த்தால் விலகி செல்ல வேண்டும் என புலிகளின் உள்ளுணர்வில் இருக்கும்.
மட்டுமல்லாது மனிதர்களை வேட்டையாடி உண்பதன் மூலம் குறைவான சத்துக்களே கிடைக்கும். அதற்கு பதிலாக பெரிய மான், காட்டெருமை உள்ளிட்டவற்றை வேட்டையாடும்போது அந்த உணவில் அதிக சத்துக்கள் கிடைக்கும். எனவே புலிகள் இயல்பாகவே மனிதர்களை வேட்டையாட விரும்புவதில்லை.












Click it and Unblock the Notifications