ஹாஸ்பிடலில் டிஸ்சார்ஜ் ஆனவங்க வீட்டுக்கு போங்க மற்ற நோயாளிகளுக்கு வழிவிடுங்க.. எடியூரப்பா வேண்டுகோள்
பெங்களூரு: மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்கி இருக்கும் நோயாளிகள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதி வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் கொரோனா தொற்று விஸ்வரூபமெடுத்து வருகிறது.
கர்நாடகாவில் தினமும் 35,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
பாஜக vs பாஜக.. கொரோனா விவகாரத்தில் உட்கட்சியிலிருந்தே
பெங்களூரு நிலை அபாயம்
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் நிறைந்த கர்நாடக தலைநகர் பெங்களுருவில் மட்டும் தினமும் 16,000-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. பெங்களுருவில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள் என அனைத்தும் நிரம்பி விட்டதால் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
படுக்கைகள் தட்டுப்பாடு
ஒரு மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பதற்கு நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. நிலைமை இப்படி இருக்க கொரோனா சிகிச்சை பிரிவில் 20 நாட்களுக்கும் மேலாக சுமார் 835 நோயாளிகள் படுக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர் என்று கர்நாடக மாநில நோய்க்கட்டுப்பாட்டு அறையின் தரவுகள் கூறின.
படுக்கையை ஆக்கிரமிப்புக்கும் நோயாளிகள்
அதாவது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 332 நோயாளிகள் 30 நாட்களும், 503 நோயாளிகள் 20 நாட்களுக்கு மேலாகவும் மருத்துவமனைகளில் இருப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டின. இவ்வாறு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நோயாளிகள் படுக்கையை ஆக்கிரமித்து கொண்டுள்ளதால் சிகிச்சைக்காக காத்திருக்கும் மற்ற நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டுகள் வந்தது.
835 நோயாளிகள் நீண்ட நாட்களாக..
இது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்கி இருக்கும் நோயாளிகள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- கொரோனா சிகிச்சை பிரிவில் 835 நோயாளிகள் 20 நாட்களுக்கும் மேலாக படுக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர் என்பதை நோய்க்கட்டுப்பாட்டு அறையின் தரவுகளிலிருந்து தெரிந்து கொண்டேன்.
மற்ற நோயாளிகளுக்கு வழிவிடுங்க
இவர்கள் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் என்ன? மருத்துவமனைகளில் 15 முதல் 20 நாட்களுக்கு மேலாக இருப்பவர்களை மருத்துவமனைகள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். புதிய நோயாளிகளுக்கு வழிவிட வேண்டும். அதிக நாட்கள் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் சிகிச்சை பெற காத்திருக்கும் நோயாளிகளின் நிலை உணர்ந்து வீட்டுக்கு செல்ல வேண்டும். இவர்களுக்கு நீண்ட காலம் மருத்துவ பராமரிப்பு அவசியமில்லை. போதிய மருந்துகளும்,வீட்டு பராமரிப்புமே போதுமானது என்று எடியூரப்பா தெரிவித்தார்.