முதல்வராக சித்தராமையா வேண்டாம்.. டிகே சிவக்குமாரின் பிடிவாதம் ஏன் தெரியுமா? மேட்டர் இதுதான்- பின்னணி
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை முதல் 2 ஆண்டுகள் சித்தராமையாவுக்கும், அடுத்த 3 ஆண்டுகள் டிகே சிவக்குமாருக்கும் வழங்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதனை ஏற்க டிகே சிவக்குமார் மறுத்துள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மே மாதம் 13ம் தேதி ரிசல்ட் வெளியான நிலையில் 224 தொகுதிகளில் 135 இடங்களை கைப்பற்றியது. பல கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என கூறிய நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த மகத்தான வெற்றியை பெற்றது.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 இடங்கள் போதும் என்ற நிலையில் கூடுதலாக காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. இதன் பின்னணியில் காங்கிரஸ் மாநில தலைவராக டிகே சிவக்குமார் மற்றும் எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் என்ற முறையில் சித்தராமையாவின் உழைப்பு தான் அதிகம் உள்ளது.
இதனால் தான் முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்க 2 பேரும் முயன்று வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வர் பதவிக்கு சித்தராமையாவின் பெயர் தான் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதோடு டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவின.
மேலும் முதல் 2 ஆண்டு சித்தராமையாவும், அடுத்த 3 ஆண்டு டிகே சிவக்குமாரையும் பதவியில் அமர்த்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது இருவரின் ஆதரவாளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த தகவலை காங்கிரஸ் மேலிடம் மறுத்தது. இந்நிலையில் கர்நாடகா காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறும்போது கர்நாடகா முதல்வர் பதவியில் யாரை அமர்த்துவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அடுத்த 48 முதல் 72 மணிநேரத்தில் கர்நாடகாவில் அமைச்சரவை அமைக்கப்படும் என்றார்.
இதற்கிடையே புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சியின் 2:3 பிளானை டிகே சிவக்குமார் ஏற்கவில்லை எனவும், தனக்கு தான் 5 ஆண்டு முழுமையாக முதல்வர் பதவி வழங்க வேண்டும் எனவும் அவர் பிடிவாதம் பிடித்து வருகிறார். மேலும் ஒருவேளை தனக்கு முதல்வர் பதவி வழங்காவிட்டால் சித்தராமையாவுக்கும் அந்த பொறுப்பை வழங்க கூடாது. மாறாக கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவை முதல்வராக்க வேண்டும் என டிகே சிவக்குமார் மேலிட தலைவர்கள் தெரிவித்து வருகிறார்.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் சித்தராமையா, டிகே சிவக்குமாரை காங்கிரஸ் கட்சியால் அவ்வளவு எளிதாக புறக்கணித்து விட முடியாது. இதனால் காங்கிரஸ் மேலிடம் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது இந்நிலையில் தான் சித்தராமையாவை விட கூடுதலாக ஓராண்டு முதல்வர் பதவி வழங்குவதாக காங்கிரஸ் மேலிடம் கூறினாலும் அதற்கு டிகே சிவக்குமார் ஒப்புக்கொள்ளாமல் இருப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
கர்நாடகாவை பொறுத்தமட்டில் டிகே சிவக்குமாரை விட சித்தராமையா அரசியலில் மூத்தவர். மேலும் அவருக்கு மாநிலம் முழுவதும் செல்வாக்கு உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக உள்ளவர்களிடம் நெருக்கமான உறவும் உள்ளது. மேலும் எம்எல்ஏக்களின் ஆதரவும் அதிகம் உள்ளது. இதனால் முதல் 2 ஆண்டு முதல்வர் பதவியை சித்தராமையாவுக்கு விட்டு கொடுத்தால் அதன்பிறகு அவர் அந்த பொறுப்பை விட்டு தர மறுக்கலாம். இப்படியான சூழலில் தொடர்ந்து சித்தராமயைாவை முதல்வராக தொடர வாய்ப்புள்ளது.
ஏனென்றால் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் இத்தகைய சூழல் தான் நிலவி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் இடையேயான தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வந்தாலும் கூட காங்கிரஸ் மேலிடம் சச்சின் பைலட்டுக்கு இன்னும் முதல்வர் பதவி வழங்கவில்லை. கட்சியின் மூத்த தலைவர் என்ற முறையில் அசோக் கெலாட்டை முதல்வராக தொடர்கிறார். இவ்வாறு சச்சின் பைலட்டுக்கு ஏற்பட்ட நிலை தனக்கும் வந்துவிடுமோ என டிகே சிவக்குமார் நினைக்கிறார்.
இதனால் தான் அவர் முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் மேலிடம் கூறிய 2.3 பார்முலாவை ஏற்கவில்லை. மாறாக தனக்கே 5 ஆண்டு முதல்வர் பதவியை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மல்லிகார்ஜூன கார்கேவை முதல்வராக்க வேண்டும் என டிகே சிவக்குமார் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications