கடல் போல் இருக்கும் கபினி, கேஆர்எஸ் அணை! ஆனாலும் காவிரியை திறந்துவிட மறுப்பு! கர்நாடகா அட்டூழியம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என கர்நாடகா முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரி நீர் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்திருப்பதாவது: கர்நாடகா அணைகளில் சராசரியை காட்டிலும் சுமார் 28 சதவீதம் நீர் குறைவாக உள்ளது. நீர் குறைவாக உள்ளது என காவிரி மேலாண்மை ஆணைய ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வெளிப்படுத்தினோம்.

cauvery karnataka tamil nadu

ஆனால் காவிரி ஒழுங்காற்று குழு தினமும் 1 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் தினமும் 1 டிஎம்சியை திறந்துவிடுவது சாத்தியமற்றது. காவிரி ஒழுங்காற்று குழுவின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 14 ஆம் தேதி காவிரி நீர் விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவுள்ளோம். எனவே தற்போதைக்கு கர்நாடகா அணைகளுக்கு என்ன நீர் வரத்து உள்ளதோ அதை திறந்துவிடுகிறோம் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக அணைகளின் நீர் விவரம்: இன்றைய தேதிக்கு அதாவது ஜூலை 12 ஆம் தேதி கபிணியில் நீர் மட்டம் 63.68 அடியாக உள்ளது. அதன் மொத்த கொள்ளளவு 65 அடியாக உள்ளது. அது போல் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர் மட்டம் 104. 3 அடியாகவும் அதன் மொத்த கொள்ளளவு 124.8 அடியாகவும் உள்ளது.

இப்படி மொத்த கொள்ளளவில் இரு அணைகளும் முறையே 96 சதவீதம், 83 சதவீதம் நீர் உள்ள நிலையிலும் கர்நாடகா அரசு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட மறுக்கிறது. இந்த நிலையில் நேற்று நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 99ஆவது கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது. அப்போது தமிழகத்திற்கு நாளை (ஜூலை 12 இன்று) முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் 1 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணைய ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கம் போல் இந்த உத்தரவை பின்பற்றாத கர்நாடகா, தண்ணீரை திறந்துவிட மறுக்கிறது. கர்நாடகாவில் குடகு பகுதியில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக தமிழகத்தில் நுழைந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து கரூர், திருச்சி வழியாக நீண்ட பயணம் மேற்கொண்டு டெல்டா பாசன பகுதிகளுக்கு செல்கிறது.

பிறகு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துவிட்டு நேராக வங்கக் கடலில் போய் கலக்கிறது. ஆனால் தமிழ்நாடு- கர்நாடகா இடையே காவிரி பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு கர்நாடகா காலம் காலமாக தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடாமல் வஞ்சித்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் காவிரி நீரை கர்நாடகாவிலிருந்து தமிழகம் போராடியே பெற்று வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கூட கர்நாடகா அரசு மதிப்பதே இல்லை. அங்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி நீரை பெறுவது என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. ஆனாலும் தமிழக அரசும் விடாமல் போராடி, கர்நாடகாவிடம் இருந்து அள்ளி இல்லாட்டியும் கிள்ளியாவது பெற்று விடும்.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவில்லை. கடந்த ஆண்டு பாதி அளவு நீரைத்தான் கர்நாடகா கொடுத்தது. இதனால் கடந்த ஆண்டு குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டது. அது போல் இந்த ஆண்டும் கர்நாடகா தண்ணீரை திறந்துவிடவே இல்லை. தங்களுக்கே குடிநீர் பற்றாக்குறை என கர்நாடகா தொடர்ந்து கூறியது.

இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்தது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயிகள் நலன் கருதி குறுவை தொகுப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் இறுதியில் நடந்த காவிரி மேலாண்மை கூட்டத்தில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நிலுவை தண்ணீரை திறக்க தமிழகம் வலியுறுத்தியது. ஆனால் கர்நாடகாவோ மீண்டும் தண்ணீர் பஞ்சம் என்ற பஞ்ச பாட்டையே பாடியது.

இதனால் காவிர் ஆணையக் கூட்டத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதே சமயம் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கேஆர்எஸ் எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபிணி உள்ளிட்ட அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+