சித்தராமையா உயிரிழப்பாம்.. பெரிய குழப்பம்! உடனே கர்நாடக முதல்வரிடம் இருந்து பறந்த லெட்டர்! என்னாச்சு
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலேயே சித்தராமையா இறந்துவிட்டதாக இருந்த போஸ்ட் பலரையும் குழப்பியது. இது சித்தராமையா கவனத்திற்கே போன நிலையில், இது தொடர்பாக அவர் பேஸ்புக் நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் பெரும்பாலான மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள். கணிசமான மக்கள் செய்திகளைக் கூட சமூக வலைத்தளங்கள் மூலமாகவே தெரிந்து கொள்கிறார்கள். ஆனால், சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் பல தவறாக இருக்கிறது. அதில் பல குறைபாடுகளும் உள்ளன.

முதல்வர் அலுவலகம்
அப்படி மெட்டா நிறுவனம் வழங்கும் ஆட்டோ மொழிபெயர்ப்பு அம்சம் தான் இப்போது கர்நாடக முதல்வர் அலுவலகம் வரை சென்றுள்ளது. கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் தனது ஃபேஸ்புக்கில் சமீபத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியை மொழிபெயர்க்கும்போது, முதலமைச்சர் சித்தராமையா இறந்துவிட்டதாகத் தவறாக பேஸ்புக் பக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டது..
மூத்த நடிகை பி. சரோஜாதேவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கன்னடத்தில் அந்த போஸ்ட் பதிவிடப்பட்டது. அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது தான் இப்படித் தவறாகப் போய்விட்டது. இது நேரடியாகவே சித்தராமையா பார்வைக்குச் சென்ற நிலையில், அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், நேரடியாகவே மெட்டா நிறுவனத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
சித்தராமையா
பேஸ்புக்கின் அந்தத் தவறான மொழி பெயர்ப்பு குறித்த போட்டோவும் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் "முதலமைச்சர் சித்தராமையா நேற்று காலமானார். பன்மொழி நட்சத்திரம், மூத்த நடிகை பி. சரோஜாதேவியின் பூத உடலுக்குத் தரிசனம் செய்து இறுதி மரியாதை செலுத்தினார்" என்று மொழி பெயர்ப்பு முற்றிலும் தவறாக இருந்தது.
இது சித்தராமையா கவனத்திற்குப் போகவே அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தள நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், கன்னட ஆட்டோமெடிக் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கும் வரை அதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மெட்டா நிறுவனத்தை வலியுறுத்தினார்.

கடும் கண்டனம்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மெட்டா தளங்களில் கன்னடக் கருத்துகள் தவறான மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இது உண்மைகளைச் சிதைத்து, யூசர்களை தவறாக வழிநடத்துகிறது. குறிப்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் இது மிகவும் ஆபத்தாக முடியலாம். உடனடியாக இதைச் சரிசெய்யும்படி எனது ஊடக ஆலோசகர் கே.வி. பிரபாகர் மெட்டாவுக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் தவறானவை என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்த அலட்சியம் பொதுமக்களின் புரிதலையும் நம்பிக்கையையும் கெடுக்கும்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இது பெரும் விவாதமாக மாறிய பிறகே மெட்டா நிறுவனம் அந்தத் தவறான மொழிபெயர்ப்பைச் சரி செய்ததாகத் தெரிகிறது.
உடனே பறந்த கடிதம்
இதற்கிடையே முதலமைச்சரின் ஊடக ஆலோசகர் மெட்டாவுக்கு எழுதிய கடிதத்தையும் சித்தராமையா பகிர்ந்துள்ளார். கன்னடத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும்போது தரத்தையும், சரியான அர்த்தத்தையும் மேம்படுத்தக் கன்னட மொழி நிபுணர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில் மேலும், "கன்னடத்திலிருந்து ஆங்கிலத்துக்கான மொழிபெயர்ப்பு அடிக்கடி தவறானதாக இருப்பது கவலையளிக்கிறது. குறிப்பாக முதலமைச்சரின் அறிவிப்புகள், அதிகாரப்பூர்வ அறிக்கைகள் அல்லது முக்கியமான செய்திகள் தவறாக மொழிபெயர்க்கப்படும்போது இது பெரும் ஆபத்தை விளைவிக்கும். மக்கள் தங்கள் படிப்பது மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை என்பதை பெரும்பாலும் உணர மாட்டார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதை உடனடியாகச் சரி செய்யும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications