மத்திய அரசின் வஞ்சகத்துக்கு எதிராக டெல்லி சலோ.. சித்தராமையா தலைமையில் கர்நாடகா அரசு நாளை போராட்டம்
பெங்களூர்: மத்திய பாஜக அரசின் நிதி ஒதுக்கீடு அநீதியைக் கண்டித்து டெல்லியில் நாளை கர்நாடகா காங்கிரஸ் அரசு போராட்டம் நடத்தும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசா கர்நாடகா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த அநீதியைக் கண்டித்து டெல்லியில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு போராட்டம் நடத்துகிறது. டெல்லியில் நாளை நடைபெறும் போராட்டம் பாஜகவுக்கு எதிரானது அல்ல. கர்நாடகா மக்களுக்கான போராட்டம்.

நாங்கள் இதுவரை பொறுமையாக இருந்துவிட்டோம். இப்போது அநீதிக்கு எதிரான குரலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பத்ரா மேலணை திட்டத்துக்கு ரூ5,300 கோடி வழங்குவோம் என பட்ஜெட்டில் அறிவித்தது மத்திய அரசு. ஓராண்டாகியும் இதுவரை இந்த நிதியை மத்திய அரசு வழங்கவே இல்லை.
நாட்டின் மாநிலங்கள் வழங்கும் வரி வருவாயை பகிர்ந்து அளிக்கத்தான் நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது வரை மொத்தம் 16 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. ஆனால் நிதி ஆணையம் கர்நாடகாவுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டது. நிதி இழப்பை சரி செய்ய கர்நாடகாவுக்கு ரூ5,495 கோடி சிறப்பு நிதி ஒதுக்க பரிந்துரைத்தது நிதி ஆணையம். இதனையும் கூட மத்திய அரசு தரவே இல்லை.
கடந்த 15 ஆவது நிதி ஆணையம் கர்நாடகாவுக்கு ரூ73,593 கோடி நிதியை குறைத்துவிட்டது. கர்நாடகா, மத்திய அரசுக்கு ரூ100 கொடுத்தால் எங்களுக்கு ரூ12 அல்லது ரூ13 தான் தருகிறது. கர்நாடகா மட்டும் ஆண்டுக்கு ரூ4.30 லட்சம் கோடி வரி செலுத்துகிறது. இதில் வெறும் ரூ50,257 கோடிதான் கர்நாடகாவுக்கு கிடைக்கிறது. 15-வது நிதி ஆணையத்தை அமைத்த பின்னர் ரூ.1.87 லட்சம் கோடி இழப்பு கர்நாடகாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. மேகதாது திட்டத்துக்கும் மத்திய அரசு அனுமதி தரவில்லை. ஆகையால் டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை கர்நாடகா காங்கிரஸ் அரசு போராட்டம் நடத்துகிறது. இதில் அனைத்து கட்சி கர்நாடகா எம்பிக்களும் பங்கேற்க வேண்டும். டெல்லி போராட்டத்தில் நாளை பங்கேற்காமல் இருந்தால் அது கர்நாடகா மக்களுக்கு செய்கிற பெருந்துரோகம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications