விரைவில் தேர்தல்.. கர்நாடகா பாஜக எம்எல்சி வீட்டில் சிக்கிய ரூ.8 கோடி பொருட்கள்.. அதிரடி சோதனை
கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணியை கவிழ்த்த எம்எல்ஏக்களில் ஒருவரான ஆர் சங்கர் பாஜகவில் எம்எல்சியாக உள்ளார்.
பெங்களூர்: கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக எம்எல்சி ஆர் சங்கரின் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் வீட்டில் வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 6,000க்கும் அதிக சேலைகள், 9000க்கும் பேக்குகள், வீட்டு உபயோக பொருட்கள் சிக்கிய நிலையில் மொத்தம் ரூ.8 கோடி மதிப்பிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்காளர்களுக்கு வழங்க இந்த பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா பாஜக எம்எல்சியாக இருப்பவர் ஆர் சங்கர். இவர் ஹவேரி மாவட்டம் ராணிபென்னூரை சேர்ந்தவர். கடந்த 2018 சட்டசபை தேர்தலில் ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடகா பிரக்ஞாவந்தா ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதலில் இவர் காங்கிரஸ்-ஜனதாதளம் எஸ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரானார்.
அதன்பிறகு கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில் சங்கர் பாஜகவுக்கு ஆதரவு நீட்டினார். இதையடுத்து எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு ராணிபென்னூரில் நடந்த இடைத்தேர்தலில் அவருக்கு பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. மாறாக பாஜகவில் எம்எல்சி (சட்டசபை மேலவை உறுப்பினர்) பதவி வழங்கியது.

வணிக வரித்துறை சோதனை
இந்நிலையில் தான் கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ராணிபென்னூர் தொகுதியில் போட்டியிட சங்கர் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் ராணிபென்னூரில் உள்ள பீரேஸ்வரா நகரில் வசித்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று வணிக வரித்துறையினர் அவரது வீட்டுக்குள் நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் தேர்தல் நெருங்கும் நிலையில் அவர் வாக்காளர்களுக்கு வினியோகிக்க ஏராளமான பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக சென்ற புகாரை தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிக்கிய ரூ.8 கோடி பொருட்கள்
இந்த சோதனையின்போது அவரது வீட்டில் இருந்து சேலைகள், எல்கேஜி முதல் கல்லூரி வரை மாணவர்கள் பயன்படுத்தும் பேக்குகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சிக்கின.. குறிப்பாக இந்த சோதனையின்போது 6 ஆயிரத்துக்கும் அதிகமான சேலைகள், 9 ஆயிரத்துக்கம் அதிகமான பேக்குகள், ரூ.30 மதல் 40 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மொத்தமாக பார்த்தால் அவரது வீட்டில் சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பில்களை கேட்ட அதிகாரிகள்
இதையடுத்து இந்த பொருட்களுக்கான ஜிஎஸ்டி பில்களை வணிக வரித்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதற்கான பில்களை வழங்குவதாகவும் சிறிது காலஅவகாசம் வழங்கும்படியும் பாஜக எம்எல்சி சங்கர் கோரிக்கை வைத்துள்ளார். இதில் சரியான பில் இல்லாவிட்டால் வணிக வரித்துறை அதிகாரிகள் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதரவாளர்கள் போராட்டம்
மேலும் வருவாய்த்துறையினரும் அவரது வீட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே ஆர் சங்கர் வீட்டில் வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதை எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு குவிந்து போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் ராணிபென்னூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications