கர்நாடகாவின் மேகதாது அணை - டிகே சிவகுமார் தலைமையில் இன்று ஆலோசனை- முக்கிய அறிவிப்பு வெளியாகும்?
பெங்களூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடகா மாநில அரசு இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. கர்நாடகா துணை முதல்வரும் நீர்வளத்துறை, பெங்களூர் மேம்பாட்டு துறை அமைச்சருமான டிகே சிவகுமார் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு ஏற்கனவே மேகதாது அணை கட்ட ரூ9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸும் மேகதாது அணை கட்ட வலியுறுத்தி பாதயாத்திரை மேற்கொண்டது. இப்பாதயாத்திரையை நடத்தியவர்தான் தற்போதைய துணை முதல்வர் டிகே சிவகுமார்தான்.

நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் மேகதாது அணை கட்டுவதற்கு ரூ9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது.
பெங்களூர் மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பெங்களூர் மாநகர குடிநீர் தேவைக்காக என்று சொல்லி மேகதாது அணை கட்டும் முயற்சிகளை கர்நாடகா காங்கிரஸ் அரசு விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இன்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டம் அமைச்சர் டிகே சிவகுமார் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் மேகதாது அணை கட்டுவது தொடர்பான அறிவிப்பை கர்நாடக அரசு வெளியிடக் கூடும்.
கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் மேகதாது அணை கட்டும் விவகாரத்தை கர்நாடகா கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications