'அவர் உறவினர்தான்.. எங்களுக்குள் ஆயிரம் இருக்கும்'.. தொண்டரை தாக்கியது குறித்து காங். தலைவர் விளக்கம்
பெங்களுரு: கர்நாடகாவில் தோளில் கை வைத்த நிர்வாகி ஒருவரை அறைந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜி மெடகவுடா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தற்போது பெங்களூருவில் இருந்து மாண்ட்யா மாவட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட ஜி மெடகவுடாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் நேரில் சென்றார்.

கன்னத்தில் அறைந்தார்
கட்சி நிர்வாகிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது நிர்வாகி ஒருவர் டி கே சிவக்குமார் தோளில் கை வைக்க முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார், அந்த நிர்வாகியின் கன்னத்தில் பளார் என அறைந்தார். அங்கு இருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் இதனை வீடியோ எடுத்தபோது வீடியோவை டெலிட் செய்யும்படியும் சிவகுமார் கூறினார்.

பாஜக கண்டனம்
பொதுவெளியில் சிவகுமாரின் இந்த செயலுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. "கட்சியின் நிர்வாகி ஒருவரையே கர்நாடகா காங்கிரஸ் தலைவர் இப்படி அறைகிறார் என்றால் மற்றவர்களை என்ன செய்வார்'' என்று கடுமையாக விமர்சித்தார் பாஜக பொதுச் செயலாளர் சிடி ரவி. நெட்டிசன்களும் சிவகுமாரை வறுத்தெடுத்தனர்.

புது விளக்கம்
''அந்த நபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்தார். இதனாலேயே கோபமடைந்து அவரை அறைந்தேன்'' என்று தான் செய்த செயலுக்கு சிவகுமார் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு புது விளக்கம் அளித்துளளார் டி கே சிவக்குமார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உறவினர்
'உன் கையை என்னிடமிருந்து விலக்கு' என்று சொல்லி அவரை கொஞ்சம் கடினமாக அடித்தேன். இதனால் என்ன? அவர் எங்கள் வீட்டுப் பையன். தொலைதூர உறவினர். அவர் என்னைத் திட்டினால், நான் கேட்பேன். நான் திட்டினால், அவர் கேட்பார். இது அவருக்கும் எனக்கும் இடையில் உள்ள பிரச்சினை என்று டி கே சிவக்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications