எம்ஜிஆர் போல்.. தொகுதி செல்லாமலே வென்ற கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ தகுதி நீக்கம்.. போச்சே! என்ன நடந்தது?
பெங்களூர்: கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். இதையடுத்து அவர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் எம்எல்ஏவாக இருந்த தார்வார் சட்டசபை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி கடந்த 2023 சட்டசபை தேர்தலில் தொகுதி பக்கம் போகாமலே தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் போல் வென்றவர் ஆவார்.
கர்நாடகா மாநிலம் தார்வார் சட்டசபை தொகுதியில் கடந்த 2013 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வினய் குல்கர்னி போட்டியிட்டு வெற்றி பெற்றார். சித்தராமையாவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்தார். பிறகு 2018 தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். பிறகு 2023 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தான் தார்வார் மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் யோகேஷ் கவுடா என்பவர் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். ஜிம்மில் இருந்த யோகேஷ் கவுடாவை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொன்றது.
வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை
இந்த வழக்கில் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் தார்வார் போலீசார் விசாரணை நடத்திய இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது. யோகேஷ் கவுடாவின் கொலையில் வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு பெலகாவி ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர் சாட்சிகளை மிரட்டிதாக கூறப்பட்டது. இதையடுத்து மீண்டும் 2025ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் 15ம் தேதி வினய் குல்கர்னி உள்பட 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. யோகேஷ் கவுடாவின் அரசியல் வளர்ச்சி தாங்காமல் வினய் குல்கர்னி தீர்த்து கட்டியது தெரியவந்தது.
தகுதி நீக்க அறிவிப்பு
இந்த தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே வினய் குல்கர்னியின் எம்எல்ஏ பதவி பறிபோனது. ஏனென்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி கொலை உள்பபட பிற குற்ற வழக்கில் ஒருவருக்கு கு குறைந்தபட்சம் 2 ஆண்டு அல்லது அதிகமான சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவரது பதவி தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.
இருப்பினும் இதுதொடர்பாக கர்நாடகா சட்டசபை சார்பில் அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில் வினய் குல்கர்னி தகுதி நீக்கம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. ஏப்ரல் 15 முதல் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கர்நாடகா சட்டசபை செயலாளர் விசாலாட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தண்டனை முடிந்தும் 6 ஆண்டு தடை
அதோடு தார்வார் சட்டசபை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 6 மாதத்தில் தார்வார் தொகுதிக்கு மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் தண்டனை முடிந்து அவர் வெளியே வந்தாலும் கூட அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இதன்மூலம் வினய் குல்கர்னியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
தொகுதி பக்கம் போகாமலே வென்றவர்
தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினய் குல்கர்னி கடந்த 2023 சட்டசபை தேர்தலில் தார்வார் தொகுதியின் பக்கமே செல்லாமல் வெற்றி பெற்றார். ஏனென்றால் தேர்தல் சமயத்தில் இந்த யோகேஷ் கவுடா கொலை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. மேலும் வினய் குல்கர்னி ஜாமீனில் வெளியே இருந்தார். ஆனால் அவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் சாட்சிகளை கலைக்கலாம் எனக்கருதி நீதிமன்றம் அவரது சொந்த ஊரான தார்வார் மாவட்டத்துக்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்தது. இதனால் அவர் பிரசாரத்துக்கு செல்லவில்லை. ஆன்லைனில் மட்டுமே பிரசாரம் செய்தார். மாறாக அவரது மனைவி, குடும்பத்தினர், காங்கிரஸ் தொண்டர்கள் பிரசாரம் செய்து வெற்றி பெற வைத்தனர்.
எம்ஜிஆருக்கு நடந்தது என்ன?
முன்னதாக, தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கடந்த 1984ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் சமயத்தில் எம்ஜிஆர் உடல்நலக்குறைவால் அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் பிரசாரத்துக்கு செல்லவில்லை. இருப்பினும் அவர் ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து 3வது முறையாக முதல்வரானார். எம்ஜிஆர் போல் தொகுதி பக்கம் செல்லாமல் வென்ற வினய் குல்கர்னி தற்போது பாஜக பிரமுகர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications