சிவகுமார சுவாமி இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க நேரம் இல்லையோ.. மோடிக்குக் கண்டனம்
பெங்களூரு: கர்நாடகத்தைச் சேர்ந்த மறைந்த சிவகுமார சுவாமிஜியின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளாதற்கு கர்நாடக துணை முதல்வர் ஜி. பரமேஷ்வரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் தும்கூருவில் உள்ள பிரபலமான ஸ்ரீ சித்தகங்கா மடத்தின் மடாதிபதியான ஸ்ரீஸ்ரீ சிவகுமார சுவாமி நேற்று காலமானார். அவரது மறைவால் கர்நாடகத்தில் பெரும் சோகம் நிலவுகிறது. குறிப்பாக அவர் சார்ந்த லிங்காயத்து சமூகத்தினர் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
111 வயதில் முக்தி அடைந்த சிவகுமார சுவாமிகளின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பெரும் திரளான தலைவர்கள், மக்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாஜக சார்பில் பிரதமர் மோடியோ அல்லது பாஜக தலைவர் அமித் ஷாவோ வரவில்லை. அதேபோல காங்கிரஸ் தரப்பிலும் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் என முக்கியஸ்தர்கள் யாரும் வரவில்லை.
பிரதமர் சார்பில் முக்கிய மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.தேவகவுடா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதுகுறித்து பரமேஷ்வரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
PM Modi attends celebrity weddings, meets movie stars but skips the funeral of our NaDedāDuva devaru, who dedicated his life to help the poor & the marginalised. Repeated requests to confer Bharat Ratna on him have gone in vain.
— Dr. G Parameshwara (@DrParameshwara) January 23, 2019
Truly well-deserved recipient of Kotler Award 👏🏽
பிரதமர் மோடி நடிக, நடிகையரின் திருமணங்களுக்குப் போகிறார், பிரபலங்களைச் சந்திக்கிறார். ஆனால் நமது கடவுளாக வாழ்ந்து மறைந்தவரின் இறுதிச் சடங்குக்கு வர முடியவில்லை. தனது வாழ்க்கையை முழுமையாக ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் ஒதுக்கி பாடுபட்டு மறைந்துள்ளார் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி. அவருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை வீணாகிப் போய் விட்டது என்று கோபம் காட்டியுள்ளார்.
சிவகுமார சுவாமிஜியின் இறுதிச் சடங்கில் மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சதானந்த கெளடா, கர்நாடக முதல்வர் எச்டி. குமாரசாமி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.