முஸ்லிம்களுக்கு எதிராக சோஷியல் மீடியாவில் பதிவிட்ட ஒரு வார்த்தை.. சிக்கலில் டாக்டர்!
பெங்களூர்: கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட காவல்துறை ஒரு மருத்துவர் மீது அவரது இணையதள பதிவில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பகைமையை தூண்டும் பதிவினை இட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளது.
உடுப்பியின் பிரம்மாவாராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் Dr. கீர்த்தன் உபாத்யாயா என்பவர் மீதே இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 13 ஆம் தேதி, X என்ற தளத்தில் ஒரு நெட்டிசன், "இந்த உலகில் இருந்து நீங்கள் ஒரு விஷயத்தை நீக்க முடியும் என்றால், அது என்னவாக இருக்கும்?" என்று கேட்டார். அதற்கு Dr. உபாத்யாயா, தனது எக்ஸ் தளத்தில் இருந்து, "முஸ்லிம் சமூகம்" என்று பதிலளித்தார்.

இந்த பதிவு வைரலாகி பரவலான கண்டனங்களுக்கு ஆளானதைத் தொடர்ந்து, அந்த பதிவை நீக்கிவிட்டு தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அவர் கூறினார் உபாத்யாயா.
"நான் சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரைப் பயன்படுத்த மறுத்துவிட்டேன், மேலும் விரும்பத்தகாத ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டிருப்பதை உணர்ந்தேன். யாரோ என் கணக்கைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர் போலும். நான் கடவுச்சொல், உள்நுழைவுக் குறிப்புகள் மற்றும் கணக்கு தொடர்பான அனைத்தையும் மாற்றிவிட்டேன். என் கணக்கு ஹேக் செய்யப்பட்டுதான் இப்படி பதியப்பட்டுள்ளது. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், அந்த பதிவு நீக்கப்பட்டிருந்தாலும், சமூக வலைதளங்களில் பலர் அந்த பதிவின் படங்களைப் பகிர்ந்து மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காவல்துறை டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. உடுப்பி, மங்களூர் உட்பட கர்நாடகாவின் கடலோர பகுதிகள் மதரீதியாக பதற்றமானவை, அதிக கலவரங்களை கண்ட பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications