கர்நாடகா தேர்தலில் போட்டியா? இல்லையா? டிகே சிவக்குமாரின் வேட்புமனு பரிசீலனையில் செம ட்விஸ்ட்! ஆஹா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவியது. இதனால் அவரது தம்பியான காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் தான் இன்றைய வேட்புமனு பரிசீலனையில் தேர்தல் அதிகாரி ட்விஸ்ட் கொடுத்தார்.
கர்நாடகாவில் கடந்த 2018 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. 5 ஆண்டு ஆட்சிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 10ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் சார்பில் பல்வேறு கட்டங்களாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இது அவரது சொந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2008, 2013, 2018 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 4வது வெற்றியை நோக்கி அவர் அங்கு களம் இறங்கி உள்ளார். இந்த முறை காங்கிரஸ் ஆட்சியமைந்தால் டிகே சிவக்குமார் முதல்வராக தேர்வாக வாய்ப்புள்ளது என கூறப்படும் நிலையில் அவருக்கு இது முக்கிய தேர்தலாக உள்ளது.
இந்நிலையில் தான் டிகே சிவக்குமாரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக பாஜக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் களமிறக்கப்பட்டுள்ளார். இதுதவிர அசோக் பெங்களூர் பத்மநாபநகர் சட்டசபை தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில் டிகே சிவக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று டிகே சிவக்குமாரின் தம்பியான காங்கிரஸ் எம்பி டிகே சுரேசும் திடீரென்று கனகபுரா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் டிகே சிவக்குமார் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகளிடம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சில வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இதனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்படலாம். இதனால் தான் டிகே சுரேஷ் மனுத்தாக்கல் செய்தததாக தகவல்கள் வெளியாகின.
மேலும் இன்று காலையில் வேட்புமனு மீதான பரிசீலனை தொடங்கியது. டிகே சிவக்குமாரின் வேட்புமனுத்தாக்கல் தள்ளுபடி செய்யப்படலாம் என்றதால் அவரது ஆதரவாளர்கள் கலக்கமடைந்து இருந்தனர். இறுதியில் டிகே சிவக்குமாரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை தேர்தல் அதிகாரி முறைப்படி அறிவித்தார். இதனால் அவரும், அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி .உள்ளது. இதனால் டிகே சுரேஷ் தனது மனுவை வாபஸ் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications