அடுத்த அடி.. கர்நாடகாவில் ஈபிஎஸ் வேட்பாளர் ஓகே! ஓபிஎஸ் வேட்பாளரின் மனு தள்ளுபடி! காரணம் என்ன?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திய வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டுள்ளது. ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட நிலையில் ஒருவரின் ஒருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இன்னொருவரின் மனு சுயேச்சை என்ற பெயரில் ஏற்கப்பட்ட நிலையில் மற்றொருவரின் மனு அதிமுக என ஏற்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட விரும்பியது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. இதனால் கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் அதிமுக களமிறங்க திட்டமிட்டது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணியினர் தனித்தனியே பாஜக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து இருவரும் தனித்து களம் இறங்க முடிவு செய்தனர்.
அதன்படி தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூர் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இவர் கர்நாடகா மாநில அதிமுக அவைத்தலைவராக உள்ள நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்பரசன் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் பெங்களூர் புலிகேசி நகர் தொகுதியில் நிறுத்தப்பட்ட அன்பரசனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூர் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அன்பரசன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் எடப்பாடி பழனிச்சாமிக்கு போட்டியாக ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பெங்களூர் புலிகேசி நகர் தொகுதியின் வேட்பாளராக நெடுஞ்செழியன், பெங்களூர் காந்திநகர் தொகுதியில் குமார் என்பவரும், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா என்பவரும் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் நேற்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் அணி வேட்பாளர்களில் 2 பேரின் மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஒருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் புலிகேசி நகர் தொகுதி வேட்பாளர் நெடுஞ்செழியனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர் சரியாக வேட்புமனுவை நிரப்பாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மாறாக கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட்ட அனந்தராஜாவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும்பி பார்ம் தாமதமாக வழங்கியதாக கூறி அவர் அதிமுக என அங்கீகரிக்கப்படவில்லை. மாறாக அனந்தராஜா சுயேச்சை வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
மேலும் காந்திநகர் வேட்பாளர் குமாரின் வேட்புமனுவும் பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவர் ஓ பன்னீர் செல்வம் அணியின் சார்பில் போட்டியிட்டாலும் கூட அவர் அதிமுக வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் ஓ பன்னீர் செல்வம் சார்பில் காந்தி நகரில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் குமார் அதிமுக வேட்பாளர் என அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இது தற்போது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications