கர்நாடகா:மாஜி PM தேவேகவுடா குடும்பத்தில் பிரளயம்! ஹாசன் தொகுதிக்கு முட்டிமோதும் மகன்-மருமகள்! அடடா
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கர்நாடகாவில் தீவிர அரசியலில் உள்ள நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக தேவேகவுடாவின் மகன், மருமகள் இடையே கடும் மோதல் உருவ
பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம்(ஜேடிஎஸ்) கட்சி முதற்கட்டமாக 93 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தேவேகவுடாவை சேர்ந்து அவரது குடும்பத்தில் 8 பேர் தீவிர அரசியலில் உள்ளனர். இதில் இளையமகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி சென்னபட்டானாவிலும், அவரது மகன் நிகில் ராமநகரிலும் போட்டியிட உள்ளனர். மூத்த மகன் ஹொலேநரசிப்புராவில் களமிறங்கும் நிலையில் அவரது மனைவி பவானி ரேவண்ணா ஹாசன் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்கு குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தேவேகவுடாவின் குடும்பத்தில் வெடித்த பிரளயம் தான் தற்போது கர்நாடகா அரசியலில் பேசும் பொருளாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க விரும்பும் கட்சி கண்டிப்பாக 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆட்சியை தக்க பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
மாறாக பாஜகவை தோற்கடித்து கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இதுதவிர ஜனதாதளம்(எஸ்) மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க தயாராகி வருகின்றன. இதனால் அங்கு நான்கு முனை போட்டிக்கு வாய்ப்புள்ளது.

ஜனதாதளம் எஸ் வேட்பாளர் அறிவிப்பு
பாஜக, காங்கிரஸ் கட்சியின் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் வேட்பாளர் தேர்வு தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்கட்சி சர்வே, தொகுதியில் பிரபலம், ஜாதி பலம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆம்ஆத்மியும் வேட்பாளர் அறிவிப்புக்கு தயாராகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

தேவேகவுடாவின் குடும்ப அரசியல்
கர்நாடகாவில் மிகப்பெரிய அரசியல் குடும்பம் என்றால் அது தேவேகவுடாவின் குடும்பம் என சட்டென கூறிவிடலாம். கர்நாடகா முதல்வர் முதல் பிரதமர் பதவி வரை வகித்தவர் தான் இந்த தேவேகவுடா. இவர் ஜனதாதளம்(எஸ்) எனும் கட்சியை நடத்தி வருகிறார். தேவேகவுடாவின் இளைய மகன் குமாரசாமி கர்நாடகாவின் முன்னாள் முதல்வரார் ஆவார். அவரது மூத்த மகன் ரேவண்ணா முன்னாள் அமைச்சர். ஜனதாதளம் (எஸ்) கட்சி முதற்கட்டமாக 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் ராமநகர் மாவட்டம் சென்னபட்டணா தொகுதியில் தேவேகவுடாவின் இளைய மகனும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான குமாரசாமி போட்டியிடுகிறார். அவரது மகன் நிகில் குமாரசாமி ராமநகரிலும் போட்டியிடுகிறார்கள். இதுதவிர தேவேகவுடாவின் மூத்த மகனும் முன்னாள் அமைச்சருமான எச்டி ரேவண்ணா ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புராவில் போட்டியிடுகிறார்.

களமிறங்க ஆசைப்படும் மூத்த மருமகள்
இந்த முறை நடக்கும் சட்டசபை தேர்தலில் தேவேகவுடாவின் குடும்பத்தில் இருந்து தற்போது வரை 3 பேர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது தேவேகவுடாவின் குடும்பத்தில் இருந்து இன்னொருவர் போட்டியிட விரும்புகிறார். அதாவது தேவகவுடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மனைவி பவானி ஹாசன் தொகுதியில் போட்டியிட இருப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஹாசன் என்பது தேவேகவுடாவின் சொந்த தொகுதியாகும். இங்கு இன்னும் ஜனதாதளம் (எஸ்) சார்பில் வேட்பாளர் அறிவிக்காத நிலையில் பவானி ரேவண்ணா தான் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு செய்துள்ளார்.

குமாரசாமி எதிர்ப்பு
இதற்கு தேவேகவுடாவின் இளையமகனும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜனதாதளம் (எஸ்) கட்சியை குடும்ப கட்சி என காங்கிரஸ், பாஜகவினர் விமர்சனம் செய்து வரும் நிலையில் தான் பவானி ரேவண்ணாவுக்கு சீட் கொடுக்க குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹாசன் சட்டசபை தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கோட்டையாகும். இருப்பினும் கடந்த முறை இங்கு பாஜக வெற்றி பெற்ற நிலையில் இங்கு மீண்டும் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெற வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக தொடர்ந்து தொகுதியில் பலரும் பணியாற்றி வருகின்றனர். ஜனதாதளம் கட்சியை சேர்ந்த ஹாசன் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவரும் முன்னாள் எம்எல்ஏ பிரகாசின் மகனுமான ஸ்வரூப்புக்கு இங்கு போட்டியிட ஆர்வமாக உள்ளார். பல கிராமங்களுக்கு சென்று பிரசாரத்தை அவர் துவக்கி உள்ள நிலையில் தான் சொந்த அண்ணனின் மனைவியான பவானி ரேவண்ணாவுக்கு கொடுப்பது சரியாக இருக்காது என குமாரசாமி நினைக்கிறார்.

மோதல் போக்கு
இதனால் தற்போது பவானி ரேவண்ணா மற்றும் குமாரசாமி இடையே மோதல் போக்கு உள்ளது. இருப்பினும் கூட தேவேகவுடாவின் மகன் ரேவண்ணா, மகன்கள் ஹாசன் எம்பி பிரஜ்வல், இன்னொரு மகனும் எம்எல்சியுமான சுராஜ் ஆகியோர் பவானி ரேவண்ணாவுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் ஹாசன் தொகுதி விவகாரம் தேவேகவுடாவின் குடும்பத்தினர் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இதில் இறுதி முடிவு என்பது தேவேகவுடாவின் கையில் தான் உள்ளது. அவர் ஓகே சொன்னால் நிச்சயம் பவானி ரேவண்ணா ஹாசன் தொகுதியில் போட்டியிடுவார். இல்லாவிட்டால் அவர் களமிறங்குவது பிரச்சனையாகும். தேவேகவுடாவின் குடும்பத்தில் தற்போதைய இந்த சண்டை என்பது கர்நாடகா அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

தீவிர அரசியலில் 8 பேர்
மேலும் தற்போதைய சூழலில் தேவேகவுடாவின் குடும்பத்தில் மட்டும் 8 பேர் தீவிர அரசியலில் உள்ளனர். அதன்படி தேவேகவுடா ராஜ்யசபா எம்பியாக உள்ளார். அவரது மூத்த மகன் ரேவண்ணா ஹாசன் மாவட்ட ஹொலேநரசிப்புரா எம்எல்ஏவாக உள்ளார். இவரது மகன் பிரஜ்வெல் ரேவண்ணா ஹாசன் எம்பியாகவும், இன்னொரு மகன் சுரஜ் எம்எல்சியாகவும் உள்ளார். அதேபோல் இளையமகனான முன்னாள் முதல்வர் குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா எம்எல்ஏவாக உள்ளார். இவரது மனைவி அனிதா ராமநகர் எம்எல்ஏவாக உள்ளார். மகனும், நடிகருமான நிகில் 2019ல் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் கட்சியின் இளைஞர் அணி தலைவராக உள்ளார். தற்போது ராமநகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே 8 பேர் அரசியலில் உள்ள நிலையில் பவானி ரேவண்ணாவும் ஹாசன் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார். இவரும் அரசியலுக்கு புதியவர் அல்ல. இவர் ஹாசன் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications