போட்டோவுக்கு போஸ்.. கேமராவை மறைத்த விநாயகர் சிலையை தள்ளி அவமதித்த பிரதமர் மோடி? சர்ச்சை வீடியோ
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் நோக்கத்தில் தனக்கு நினைவு பரிசாக வழங்கப்பட்ட விநாயகர் சிலையை விலக்கி எடுத்து செல்லும்படி கூறியதாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. தற்போது இந்த பிரச்சனையை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிப்பதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட மேலிட தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாநிலம் என்பதால் காங்கிஸை வெற்றி பெற வைப்பதில் அவருக்கு கூடுதல் பணி உள்ளது.
அதேபோல் பாஜக சார்பில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல மேலிட தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக கர்நாடகாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.அப்போது, ‛‛கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது வெறும் ரூ.30 ஆயிரம் கோடி மட்டுமே வெளிநாடு முதலீடு ஈர்க்கப்பட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டில் பாஜக தலைமையிலான ஆட்சியில் ரூ.90 ஆயிரம் கோடி வரை வெளிநாடு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
இதுதான் இரட்டை என்ஜின் ஆட்சி. கர்நாடகாவை சிறப்பான முறையில் வளர்ச்சியடைய வைக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் ஏடிஎம்மாக தான் கர்நாடகாவை பயன்படுத்துகின்றன'' என விமர்சனம் செய்திருந்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய தொப்பி அணிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு நினைவு பரிசாக விநாயகர் சிலை வழங்கப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி மேடையில் பாரம்பரிய தொப்பியுடன் நிற்கிறார். அதனை கேமராமேன்கள் வீடியோ, போட்டோ எடுக்க முயற்சிக்கின்றனர். இந்த வேளையில் அவருக்கு நினைவு பரிசாக வழங்கப்பட்ட விநாயகர் சிலை கேமராக்களை மறைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விநாயகர் சிலையை விலக்கி எடுத்து செல்லும்படி பிரதமர் மோடி சைகை செய்வது போல் அந்த வீடியோ உள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛பிரதமர் மோடி விநாயகரை புறக்கணித்து அவமதித்துள்ளார். சிலையை தள்ளிவிடுவது என்பது இந்த ஜென்மத்தில் மன்னிக்க முடியாத பாவம். இதனால் பிரதமர் மோடி அனைத்து விநாயகர் பக்தர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications