ஆஹா.. இவர் தான் கர்நாடகாவின் எம்ஜிஆர்.. தொகுதி பக்கம் போகாமலே வென்ற காங்கிரஸின் வினய் குல்கர்னி!
பெங்களூர்: தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சட்டசபை தேர்தலில் தொகுதி பக்கம் செல்லாமல் வெற்றி பெற்றது போல் கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் வாகை சூடி இருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கடந்த 1984ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் சமயத்தில் எம்ஜிஆர் உடல்நலக்குறைவால் அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால் அவர் தேர்தல் வேளையில் தொகுதி பக்கமே செல்லவில்லை. இருப்பினும் அவர் ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று அசத்தினார். மேலும் அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக எம்ஜிஆர் முதல்வரானார். அதேபோல் தான் தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தொகுதி பக்கம் செல்லாமல் வெற்றி பெற்றுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:
கர்நாடகாவில் தார்வாடை சேர்ந்தவர் வினய் குல்கர்னி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் அமைச்சராவார். கடந்த 2003-2018 வரையிலான காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சித்தராமையாவின் அமைச்சரவையில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் 2018 ல் தார்வாட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மேலும் தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் இவர் தான் முதன்மை குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் வினய் குல்கர்னி தார்வாட் மாவட்டத்துக்குள் செல்ல நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கிடையே தான் அவர் தார்வாட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து பிரசாரத்துக்கு செல்ல அவர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். ஆனால் நீதிமன்றம் மறுத்தது.
இதையடுத்து தார்வாட் சட்டசபை தொகுதியில் பிரசாரம் உள்பட எதற்கும் செல்லவில்லை. வேட்புமனு கூட அவர் தாக்கல் செய்யவில்லை. மேலும் வினய் குல்கர்னி சார்பில் அவரது குடும்பத்தினர் பிரசாரம் செய்தனர். இந்நிலையில் தான் இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் வினய் குல்கர்னி 89,333 ஓட்டுகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட சிட்டிங் எம்எல்ஏவான பாஜக வேட்பாளர் அம்ருத் அய்யப்பா தேசாய் 71,296 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் 18,067 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வினய் குல்கர்னி வெற்றி பெற்றார். இதன்மூலம் கர்நாடகாவில் எம்ஜிஆர் போன்று வென்ற நபர் என்ற பெயரை வினய் குல்கர்னி பெற்றுள்ளார்.
*****












Click it and Unblock the Notifications