கர்நாடக தேர்தல்: ஆட்சிக்கு வந்தால் டீசலுக்கு ரூ.25 மானியம்.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய ராகுல் காந்தி
பெங்களூர்: கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் மீனவர்கள் சமுதாய மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்ச ரூபாய் வட்டியில்லா கடனும் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.25 மானியமும் வழங்குவோம் என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கவும் காங்கிரஸ் கட்சி இழந்த ஆட்சியை கைப்பற்றும் முனைப்பிலும் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. இரு கட்சிகளின் தேசிய தலைவர்களும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பல்வேறு வாக்குறுதிகளையும் ராகுல் காந்தி அளித்தார். ராகுல் காந்தி கூறியதாவது:- கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். ஆட்சி அமைந்ததும் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து உடுப்பி மாவட்டத்தில் மீனவர்கள் சமுதாய மக்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, அவர்களுக்கும் பல்வேறு சலுகைகள் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வழங்கப்படும் என்றார். ராகுல் காந்தி கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும். ஒரு லட்ச ரூபாய் வட்டியில்லா கடனும் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.25 மானியமும் வழங்குவோம்.
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 500 லிட்டர் வரை மானியத்தில் வழங்கப்படும். மீனவர்களுக்கான செலவுகள் அதிகரிக்கின்றன. எனவே உங்களுக்கு சற்று நிவாரணம் வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஆட்சிக்கு வந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.
ஏற்கனவே, வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 மற்றும் குடும்ப அட்டைகளுக்கு தலா 10 கிலோ ரேஷன் அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில், தற்போது மேலும் பல வாக்குறுதிகளையும் அளித்து வருகிறது.












Click it and Unblock the Notifications