Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்தராமையா VS சிவக்குமார்.. கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றால் யார் முதல்வர்? குறுக்கே வரும் கார்கே! ஆஹா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை பெற முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி உள்ளது. இந்த ரேஸில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் உள்பட 2 பேர் இணைந்துள்ளதாக பரவும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகாவில் ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் சில காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வந்தன.

Karnataka Election: Siddaramaiah VS DK Shivakumar Who will be next CM of Congress? another 2 name added, details here

அதாவது காங்கிரஸ் கட்சி மேஜிக் நம்பரான 113 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என இந்தியா டுடே -ஆக்சிஸ் ஆப் இந்தியா மற்றும் சிவோட்டர் -ஆக்சிஸ் மை இந்தியா சார்பில் நடத்திய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி தான் தனித்து ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன.

பிற கருத்து கணிப்புகளில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வருமே தவிர மெஜாரிட்டியை பெற வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளன. அதாவது காங்கிரஸ் கட்சி 90 முதல் 110 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும் என தெரிவித்துள்ளன. மாறாக பாஜக 80 முதல் 104 தொகுதிகளை கைப்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்புகளால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்னளர். கடந்த 2013 முதல் 2018 ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பெரிய அளவில் ஊழல், முறைகேடு புகார்கள் இல்லாத நிலையில் அந்த கட்சி 2018 ல் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில் தான் தற்போது இந்த தேர்தல் கருத்து கணிப்புகளால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது அறிவிக்கப்படவில்லை. மாறாக தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்க வாய்ப்புள்ளது. இதில் டிகே சிவக்குமாரை காட்டிலும் சித்தராமையாவுக்கு தான் அதிக வாய்ப்புள்ளது.

சித்தராமையா கடந்த 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தபோது செயல்படுத்திய அன்னபாக்யா(ரேஷன் இலவச அரிசி திட்டம்), ஷீரபாக்யா(பால் வழங்கும் திட்டம்) உள்பட பல திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் சித்தராமையா ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்ற தலைவராக உள்ளார். இது அவருக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது.

மாறாக டிகே சிவக்குமார் பணபலம் நிறைந்த செல்வாக்கு பெற்ற தலைவராக உள்ளார். ராஜஸ்தான், குஜராத் உள்பட இந்தியாவின் பல இடங்களில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை பாஜகவினர் இழுக்க முயன்றபோது அவர்களை கர்நாடகாவில் வைத்து பாதுகாத்தது டிகே சிவக்குமார் தான். இது அவருக்கு பிளஸ் பாயிண்டாக இருந்தாலும் கூட அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகளிடம் 15க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது அவருக்கு மைனஸாக உள்ளது.

இருப்பினும் தான் சார்ந்த ஒக்கலிகர் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பழைய மைசூர் மாவட்டங்களில் (ஜேடிஎஸ் கோட்டை) காங்கிரஸ் அதிக இடங்களில் கைப்பற்றும் பட்சத்தில் முதல்வர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என டிகே சிவக்குமார் நிச்சயம் கேட்பார். இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் முதல்வர் பதவி யாருக்கு என்பது மில்லியன் டாலர் கேள்வியாக தற்போது உள்ளது.

இதற்கிடையே தான் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு போட்டியாக 2 பேர் முதல்வர் ரேஸில் இணைந்துள்ளனர். அதாவது கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஆதிதிராவிடர் ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தற்போதைய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகாவை சேர்ந்தவர் என்ற நிலையில் 1972 முதல் 2008 வரை காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து போட்டியிட்டு தோல்வியடையாமல் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2009, 2013 நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார். ஆனால் பல முறை வாய்ப்பு வந்தாலும் கூட அவருக்கு முதல்வர் பதவி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.

இதனை மல்லிகார்ஜூன கார்கே மேடைகளில் பேசியுள்ளார். தான் தலித் சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதாலேயே கர்நாடகா முதல்வராகும் வாய்ப்பை எனக்கு வழங்காமல் சிலர் தடுத்ததாக அவர் வருத்தத்துடன் பேசிய வரலாறு உண்டு. இந்நிலையில் தான் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ஆதிதிராவிடர் ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நேற்று வரை இந்த கோரிக்கை எழாத நிலையில் இன்று அந்த கோரிக்கை என்பது ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது.

அதாவது மல்லிகார்ஜூன கார்கேவின் மகனான பிரியங்க் கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக பிரியங்க் கார்கேவின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகள் மூலம் காங்கிரஸ் மேலிடத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். பிரியங்க் கார்கே கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதியில் 2013, 2018 ஆகிய தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் 2013 ல் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராகவும் செயல்பட்டு உள்ளார். இந்த முறையும் சித்தாபுரா தொகுதியில் போட்டியிட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான பரமேஸ்வர் இன்று திடீரென்று பெங்களூரில் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசினார். இவரும் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக நீண்டகாலம் செயல்பட்டார். 2013ல் இவர் மாநில தலைவராக இருந்தபோது தான் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் அவர் தான் போட்டியிட்ட துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தொகுதியில் தோல்வியடைந்தார். இதனால் முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு சென்றது.

தற்போது பரமேஸ்வர் கொரட்டகெரே தொகுதி சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள நிலையில் மீண்டும் அதேதொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் நாளை ரிசல்ட் வெளிவரும் நிலையில் பரமேஸ்வரும், மல்லிகார்ஜூன கார்கேவை இன்று சந்தித்துள்ளார். இவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வராக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சித்தராமையா, டிகே சிவக்குமாருக்கு போட்டியாக தற்போது பிரியங்க் கார்கே, பரமேஸ்வர் முதல்வர் இருக்கை மீது கண்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் கூட காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் பதவி என்பது சித்தராமையா அல்லது டிகே சிவக்குமாருக்கு தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பிரியங்க் கார்கேவுக்கு அரசியல் அனுபவம் என்பது மிகவும் குறைவாக உள்ளது. மாறாக பரமேஸ்வர் துமகூரு மாவட்டம் கொரட்டகெரெ தொகுதியில் 2008, 2018 ல் வெற்றி பெற்றதோடு, எம்எல்சியாவும், உள்துறை அமைச்சர், துணை முதல்வராகவும், கர்நாடகா மாநில காங்கிரஸ் துணை தலைவர், தலைவர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். இருப்பினும் கூட சித்தராமையா, டிகே சிவக்குமார் அளவுக்கு தற்போது அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. இதனால் அவருக்கும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.
**********

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+