'என் மகன்' பிரஜ்வல் என ஓட்டு கேட்ட குமாரசாமி.. ஆபாச வீடியோ ரிலீஸ்-க்கு பின் செம்ம அந்தர் பல்டி!
பெங்களூர்: லோக்சபா தேர்தலின் போது ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா என் மகன்.. என் மகனுக்கு ஓட்டுப் போடுங்க என கெஞ்சிய முன்னாள் முதல்வர் குமாரசாமி இப்போது ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் சரியான அந்தர் பல்டி அடித்திருப்பதுதான் கர்நாடகாவில் பேசுபொருளாகி இருக்கிறது.
கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல். தேவகவுடா குடும்பத்தில் 3-வது தலைமுறையாக அரசியலில் இறங்கி இருப்பவர்களில் பிரஜ்வல் ரேவண்ணாவும் ஒருவர். 2019 லோக்சபா தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் பிரஜ்வல். ஆனால் சொத்து விவரங்களை மறைத்ததாக பிரஜ்வலின் எம்பி பதவியை கர்நாடகா உயர்நீதிமன்றம் பறித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் போய் தமது எம்பி பதவியை மீட்டு வந்தார் பிரஜ்வல்.

மகன் பிரஜ்வல் என குமாரசாமி பேச்சு: தற்போதைய லோக்சபா தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜகவின் கூட்டணியான ஜேடிஎஸ் வேட்பாளராக மீண்டும் பிரஜ்வல் போட்டியிட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக ஹாசனில் வாக்கு சேகரித்தார் குமாரசாமி. ஹாசன் பிரசாரக் கூட்டங்களில் பேசிய குமாரசாமி, என்னுடைய மகன் பிரஜ்வல். என்னுடைய மகன் பிரஜ்வலுக்கு ஓட்டுப் போடுங்கள் என உருக்கமாக பேசி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தப்பி ஓடிய பிரஜ்வல்: இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பிரளயமே ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா, எஸ்ஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா, இந்தியாவைவிட்டே தப்பி ஓடிவிட்டார்.
என்ன சொன்னார் குமாரசாமி?: பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி, திடீரென பிரஜ்வல்-க்கு எதிராக பேசியிருக்கிறார். அதாவது, ஹாசன் வீடியோக்கள், தேர்தலின் போதே வெளியாகின. தற்போது எஸ்.ஐ.டி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் உண்மைகள் வெளியே வரும். யார் தவறு செய்திருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகையால் உண்மை என்ன என்பது தெரிய வந்ததும் என் கருத்துகளைத் தெரிவிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் நானோ தேவகவுடாவோ பெண்களை மரியாதையாகத்தான் நடத்துவோம். பாதிக்கப்பட்ட நிலையில் வரும் பெண்களுக்கு நாங்கள் ஆதரவாகவும் கரிசனத்தையும்தான் காட்டி இருக்கிறோம். அத்தகைய பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணத்தான் முயற்சித்திருக்கிறோம். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார் என கூறப்படுவது என்னுடன் தொடர்புடையது அல்ல. எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் தங்களது பணியை செய்வார்கள். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு ஓடிப் போயிருந்தால் அவரை திரும்ப அழைத்து வருவது அதிகாரிகளின் பொறுப்பும் கடமையுமாகும். என்னைக் கேட்டால் பிரஜ்வலை இந்தியாவுக்கு அழைத்துதான் வரவேண்டும் என்பேன். கவலைப்பட வேண்டாம் என கூறியிருந்தார் குமாரசாமி.
எங்க குடும்பமே வேற.. : அத்துடன், ஹாசன் தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெறுவார். பிரஜ்வல் விவகாரத்தில் ஏன் எங்க குடும்பத்தின் பெயரை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இழுத்துவிடுகின்றனர்? பிரஜ்வல் ரேவண்ணா பற்றி மட்டும்தான் பேச வேண்டும். இது ஒன்றும் தேவகவுடா குடும்பத்துக்கான பிரச்சனை இல்லை. ரேவண்ணா குடும்பத்தின் பிரச்சனை. ரேவண்ணா குடும்பம் தனியாகத்தான் இருக்கின்றனர். நாங்கள் இந்த பிரச்சனையில் செய்வதற்கு எதுவுமே இல்லை என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
அந்தர் பல்டி அடித்த குமாரசாமி: 4 நாட்களுக்கு முன்னர் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது மகன் பிரஜ்வல் ரேவண்ணா என உருக்கமாகப் பேசிய குமாரசாமிதான் இப்போது, வெளிநாட்டுக்கு ஓடிப் போன பிரஜ்வலை எஸ்ஐடி அதிகாரிகள் இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும். பெண்களை எங்கள் குடும்பமே ரொம்ப மதித்துதான் நடந்து கொண்டிருக்கிறது என பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான டோனில் பேசியிருக்கிறார். அத்துடன் ரேவண்ணா குடும்பமே வேற.. எங்க குடும்பமே வேற.. தேவகவுடா குடும்பம் என ஏன் பேசனும்? என்று குமாரசாமி அடித்திருக்கும் இந்த அந்தர் பல்டிதான் இப்போது கர்நாடகா அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications