கொரோனா நிவாரணம்: தமிழக அரசுக்கு கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் பாராட்டு! எடியூரப்பா பாடம் கற்க கோரிக்கை
பெங்களூர்: தமிழக அரசு எடுத்துவரும் நிவாரண பணிகளுக்கு கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப்போல் அல்லாமல் இந்த விஷயத்தில் கர்நாடக அரசு பொறுப்பற்றத்தனமாக நடந்து கொள்வதாகவும் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரில் உள்ள கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் சித்தராமையா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சித்தராமையா கூறியதாவது:
'பிரதமரே, டிவியில் தோன்றுவதால் மட்டும் கொரோனா ஓடிவிடாது.. பொறுப்புடன் இருங்கள்'.. சித்தராமையா சுளீர்
பொய் சொல்லி ஏமாற்றும் கர்நாடக அரசு
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கொரோனா விவகாரத்தில் நிறைய பொய்கள் சொல்லி வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பொய் சொல்லி வருகின்றனர். அரசு கூறும் புள்ளிவிபரங்களை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாகத்தான் நோயால் மக்கள் உயிரிழந்துள்ளனர். பரிசோதனை அளவை குறைத்து விட்டார்கள். எனவே நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது போல கடந்த சில தினங்களாக கர்நாடக அரசு காட்டிக்கொண்டு இருக்கிறது. இதைவிட மக்களுக்கு செய்யும் துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.
மோடியும், எடியூரப்பாவும் ஒன்றுதான்
ஆக்சிஜன் கொடுக்காமல் நோயாளிகள் இறந்தால் அது கொலை என்றுதான் கருதப்பட வேண்டும். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் கர்நாடக அரசு முழு தோல்வி அடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் சொல்லும் யோசனைகளையும் இவர்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் 12 கடிதங்களை முதல்வருக்கு எழுதி உள்ளேன். ஆனால் ஒரு கடிதத்திற்கும் பதில் கூறவில்லை . இப்படி எங்கேயாவது ஒரு முதல்வரை பார்க்க முடியுமா. மத்தியிலும் மன்மோகன்சிங் கடிதம் எழுதினால், பிரதமர் மோடி பதில் அளிப்பது கிடையாது. கர்நாடக அரசின் செயலின்மை காரணமாக இத்தனை மக்கள் உயிரிழந்துள்ளனர். இப்படி ஒரு முதல்வரை நான் எப்போதும் பார்த்தது கிடையாது.
கேரளாவை பாருங்கள்
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் கர்நாடக அரசு 1,100 கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார்கள். அதில் சுமார் 400 கோடி தொழிலாளர் நலத் திட்டத்தில் உள்ள நிதி. இவர்களது அரசாங்கத்திலிருந்து போகக்கூடிய நிதி கிடையாது. வெறும் 500 கோடி ரூபாய்தான் இவர்கள் கையில் இருந்து போகப்போகிறது .கேரளா மாநிலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளனர் . கர்நாடகாவைவிட அது மிகச் சிறிய மாநிலம்.
தமிழக அரசு சூப்பர்
தமிழக அரசு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து அதில் 2000 ரூபாய் மக்கள் கைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒன்று இரண்டு அல்ல, இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இவ்வாறு நேரடியாக பண உதவியை பெற்றுள்ளனர் .
தமிழகத்தை மாதிரி நடந்து கொள்ளுங்கள்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கும் சிகிச்சை செலவு இலவசம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக அரசுக்கு இப்படி செய்வதில் என்ன கொள்ளை போய்விட்டது? இப்படி ஒரு அரசு இருக்க வேண்டுமா. இதை பார்த்துக்கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் சும்மா இருக்க வேண்டுமா. இப்படி, உண்மையைச் சொன்னால் கூட பாஜக அரசு வழக்கு பதிவு செய்கிறது. அதற்காக பயப்படபோவது கிடையாது. வழக்கு போட்டால் போடட்டும், சிறையில் அடைத்தால் அடைக்கட்டும். இந்த சிறை நிரப்பும் செயல் ஒரு இயக்கமாக மாறட்டும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.