கோலி வெளியிட்ட வீடியோவால்தான் கூட்டம்! பெங்களூர் நெரிசலுக்கு ஆர்சிபி தான் பொறுப்பு! வெளியான ரிப்போர்ட்
பெங்களூர்: ஐபிஎல் தொடர்பில் இந்தாண்டு ஆர்சிபி அணி வெற்றி பெற்ற நிலையில், அதைக் கொண்டாடும் விதமாக பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி மிக மோசமாக மாறியது. வெற்றி பேரணியில் வன்முறை வெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே இது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ஆர்சிபி அணி நிர்வாகமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விராட் கோலியின் பெயரும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வென்று கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடங்கப்பட்டுக் கடந்த 18 ஆண்டுகளில் ஆர்சிபி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் பெங்களூரில் வெற்றி கொண்டாட்டப் பேரணி நடந்தது. அதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஆர்சிபி தான் காரணம்
இது தொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நடந்து வரும் நிலையில், இது தொடர்பான ரிப்போர்ட்டை கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில் பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட நெரிசலுக்கு அணி நிர்வாகமே காரணம் என கர்நாடக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து உயர் நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சமர்ப்பித்த அறிக்கையில், பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக விராட் கோலி பொதுமக்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்ததைச் சுட்டிக்காட்டியுள்ளனர். போலீசார் அனுமதி மறுத்த பிறகும் அதிகப்படியான கூட்டம் திரண்டதற்கு அதுவே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறவில்லை
டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனம் இந்தப் பேரணியை நடத்தியிருந்தது. ஜூன் 3ம் தேதி திட்டமிடப்பட்ட வெற்றி ஊர்வலம் குறித்து போலீசாருக்கு தகவல் மட்டுமே அளித்ததாகவும் 2009 நகர உத்தரவின் கீழ் கட்டாயமான முறையான அனுமதியைப் பெறவில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், போலீசாஸ் வெளிப்படையாக அனுமதி மறுத்தது.
கோலி வீடியோ
ஆனாலும், ஆர்சிபி புரோமோஷன்களை ஆரம்பித்துள்ளது. ஜூன் 4ம் தேதி, ஆர்சிபி தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தது. அதில் ஆர்சிபி முகமாக அறியப்படும் விராட் கோலி அழைப்பு விடுப்பது போல இருந்தது. குறிப்பாக ரசிகர்கள் இலவசமாகக் கலந்து கொள்ளலாம் என்று கோலி கூறியிருந்தார். மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டதற்கு இதுவே முக்கிய காரணம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ அல்லது போலீசாரோ கூட இதை எதிர்பார்க்கவில்லை.
திடீர் கூட்டம்
அன்றைய தினம் மதியம் 3.14 மணிக்கு, திடீரென மைதானத்திற்குள் நுழைவதற்கு பாஸ் தேவை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இது குழப்பத்தை அதிகரித்தது. முன்பு யார் வேண்டுமானாலும் வரலாம் என அறிவித்துவிட்டு, பிறகு கடைசி நேரத்தில் பாஸ் என அறிவித்தால் கூட்டத்தில் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. ஆர்சிபி, டிஎன்ஏ மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் திறம்பட ஒருங்கிணைக்கத் தவறிவிட்டாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நுழைவு வாயில்களில் மோசமான திட்டமிடல் மற்றும் கேட்களை திறப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை காரணமாகவே நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ரத்து செய்யப்படாதது ஏன்!
இந்தளவுக்குக் கூட்ட நெரிசல் அதிகரித்த பிறகும் ஏன் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது என்ற கேள்வி எழுந்தது. அது குறித்தும் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரில் இந்த வெற்றி கொண்டாட்டத்தைத் திடீரென நிறுத்தினால்.. அங்குக் கூடியிருந்த மக்கள் மத்தியில் வன்முறை வெடிக்கலாம் என்றும் இதனால் நகரத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் என்று என்பதாலேயே அந்த விழா முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதன் காரணமாகவே விழாவை முழுவதுமாக ரத்து செய்யாமல்.. அதன் நேரத்தைக் குறைத்து, அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பில் தீவிர கண்காணிப்பின் கீழ் வெற்றி கொண்டாட்டத்தை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். சூழலின் தீவிரத்தை உணர்ந்து, கூட்டத்தின் மனநிலையைப் புரிந்து கொண்டு, பெரிய அளவில் மக்கள் கூடியிருந்ததால் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கர்நாடக அரசு விளக்கம்
பெரிய அளவில் கலவரம் வெடிக்கலாம் என்ற ஆபத்தை உணர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த அணுகுமுறை பின்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "விழாவை முழுவதுமாக நிறுத்துவதை விட, நேரத்தைக் குறைத்துக் கண்காணிப்பை அதிகரிப்பது பாதுகாப்பானது என்று அதிகாரிகள் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications