காயத்திற்கு தையல் போடுவதற்கு பதிலாக பெவிக்விக் வைத்து ஒட்டிய அரசு நர்சு! கர்நாடகாவில் ஷாக்
பெங்களூர்: சிறுவனின் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடுவதற்கு பதிலாக பெவிக்விக் பயன்படுத்தி ஒட்டு போட்ட ஆரம்ப சுகாதார ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தையல் போட்டால் தழும்பு வரும் என்பதால் பெவிக்விக் பயன்படுத்தினேன் எனவும் பல ஆண்டுகளாக இப்படி செய்கிறேன் என நர்சு கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதையடுத்தே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஆதூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த 14 ஆம் தேதி கன்னத்தில் காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக 7 வயது சிறுவன் அழைத்து செல்லப்பட்டுள்ளான். சிறுவன் விளையாடும் போது கீழே விழுந்ததில் கன்னத்தில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை அளிக்க சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.

காயத்துக்கு பெவிக்விக் போட்டு ஒட்டிய நர்ஸ்
அப்போது அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவர் சிறுவனின் காயத்திற்கு தையல் போடுவதற்கு பதிலாக பிளாஸ்டிக் பொருட்களை ஒட்ட பயன்படுத்தும் பெவிக்குவிக் கொண்டு ஒட்டியுள்ளார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், நர்சிடம் இதுபற்றி கேள்வி கேட்டுள்ளனர். தனது தவறை ஒப்புக்கொள்ளாத நர்சு, பெவிக்விக் பயன்படுத்தி கன்னத்தில் ஒட்டு போட்டதை நியாயப்படுத்தியுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு கன்னத்தில் ஏற்பட்ட காயம் குணமாகாமல் அதிகரித்து இருக்கிறது. இதனால் அச்சம் அடைந்த சிறுவனின் பெற்றோர், அந்த நர்சுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தனர். இதன்படி, சிறுவனுக்கு முறையான சிகிச்சை அளிக்காததை கூறி நடந்த சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நெட்டிசன்கள் சரமாரி கேள்வி
நெட்டிசன்கள் பலரும் நர்சின் செயலை கண்டித்ததோடு, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கொஞ்சம் கூட வேலையில் அக்கறை காட்டாமல் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட நர்சை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சிறுவனுக்கு செப்டிக் எதுவும் ஆகியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு? எனவும் ஆவேசமக கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கர்நாடக சுகாதாரத்துறை இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையின் முடிவில் பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்ட நர்சு ஜோதி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெவிக்விக் என்பது மருத்துவ பயன்பாடுக்கு பயன்படுத்தக் கூடிய ஒரு பொருள் இல்லை எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தார்.
சிறுவனுக்கு பாதிப்பு ஏற்பட்டதா?
இது தொடர்பாக கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நல வாழ்வுத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த விவகாரத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க பெவிக்விக் பயன்படுத்தி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட நர்சு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட அறிக்கையின் அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நர்சு மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெவிக்விக் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு ஏதேனும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்தும் மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications