வீட்டை காலி செய்ய சொன்னால் அவ்வளவுதான்.. தினமும் அறிக்கை வேண்டும்.. கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
பெங்களூர்: கொரோனா வைரஸ் பரவிவிடும் என்பதற்காக வீட்டைவிட்டு காலி செய்யச் சொல்லும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பேயிங் கெஸ்ட் எனப்படும் பிஜி ஹாஸ்டலில் தங்கி உள்ளவர்களை வெளியேறுமாறு உரிமையாளர்கள் கெடுபிடி காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதேபோல, டாக்டர்கள், நர்சுகள் போன்றோரை வீட்டிலிருந்து வெளியேற வீட்டின் உரிமையாளர்கள் கட்டாயப் படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. அவர்கள் மூலமாக தங்கள் குடும்பத்தினருக்கு நோய் பரவி விடக்கூடாது என்று அச்சப்பட்டு இவ்வாறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இது பற்றி கர்நாடக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், டாக்டர்கள், மருத்துவ துறை ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோரை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர்கள் மிரட்டுவதாக அதிக புகார்கள் வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கை, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுக்கும் குற்றத்திற்கு இணையானது. எனவே, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், பெங்களூர் மாநகராட்சி கமிஷனர், இணை கமிஷனர், நகராட்சிகளின் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் துணை கமிஷனர்கள் ஆகியோர் இதுபோன்ற புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்படுகிறது.

உரிய சட்டத்தின்கீழ், வீட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு தினமும் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜாவித் அக்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications