பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி! ஐபிஎஸ் டி.ரூபா மீதான ரூ.20 கோடி மானநஷ்ட வழக்கு ரத்து!
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி செய்து கொடுக்க ரூ.2 கோடி கைமாறியதாக ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா, அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா மீது புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக ஐபிஎஸ் டீ ரூபா மீதான ரூ.20 கோடி மானநஷ்ட வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனை காலம் முடிவடைந்துள்ளதால் சசிகலா தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழக அரசியலில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

ரூ.2 கோடி லஞ்சம் புகார்
முன்னதாக சிறையில் சசிகலா இருந்தபோது அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கைமாறியதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாகவும், சிறை முறைகேடுகள் சம்பந்தமாகவும் அவர் 2017 ஜூலை மாதம் 12ல் கர்நாடக அரசுக்கும், அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்தியநாராணராவுக்கும் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி கைமாறியதில் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த சத்திய நாராயணராவுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

மானநஷ்ட வழக்கு
இந்த குற்றச்சாட்டுக்கு இடையே அதேஆண்டு ஜூலை 31ல் சத்திய நாராயணராவ் ஓய்வு பெற்றார். இதற்கிடையே தன்மீது அவதூறான குற்றச்சாட்டை ரூபா கூறியதாகவும், தான் லஞ்சம் வாங்கவில்லை எனவும் சத்திய நாராயணராவ் கூறியிருந்தார். அதோடு ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு எதிராக 2018 பிப்ரவரி 5ல் பெங்களூரு 9வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சத்திய நாராயணராவ் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் ரூபாவிடம் ரூ.20 கோடியை நஷ்டஈடாக அவர் கோரியிருந்தார்.

உயர்நீதிமன்றத்தை நாடிய ரூபா
இந்த வழக்கு தொடர்பாக ரூபாவிடம் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் கர்நாடக உயர்நீதிமன்றம் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‛‛ஐபிஎஸ் அதிகாரியான தன் மீது மற்றொரு அரசு அதிகாரி ஒருவர் மானநஷ்ட வழக்கு தொடர அனுமதி இல்லை. மானநஷ்ட வழக்கை 6 மாதத்திற்குள் தொடர வேண்டும். ஆனால் சத்திய நாராயணராவ் 6 மாதம் கழித்து தான் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என கூறியிருந்தார்.

உயர்நீதிமன்றம் விசாரணை
இந்த மனு மீது விசாரணை நடத்திய கர்நாடக உயர்நீதிமன்றம் ஜனவரி மாதம் 11ல் ரூபா மீதான விசாரணைக்கும், அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் ரூபா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றம் நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி நாகபிரசன்னா தீர்ப்பு கூறினார்.

வழக்கு ரத்து
அப்போது ஒரு ஐபிஎஸ் அதிகாரி மீது மற்றொரு அதிகாரி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வது மானநஷ்டம் ஆகாது. மானநஷ்ட வழக்குக்கு இது தொடர்புடையது இல்லை. அரசிடம் அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் மானநஷ்ட வழக்குக்கு இது பொருந்தாது. மானநஷ்ட வழக்கை 6 மாதத்திற்குள் தொடரவில்லை. ஒரு ஐபிஎஸ் அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதனையும் பெங்களூரு கீழ் நீதிமன்றத்தில் பெறப்படவில்லை. இந்த வழக்கில் மனுதாரர் ரூபாவுக்கு கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருப்பதும் சட்டத்திற்கு எதிரானது. எனவே மனுதாரர் மீது கீழமை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை, மானநஷ்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது'' என தீர்ப்பு வழங்கினார்.

தற்போதைய பணி என்ன?
இதன்மூலம் பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடு விவகாரத்தை வெளியே கொண்டு வந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு எதிரான மானநஷ்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதன்மூலம் ரூபா நிம்மதி அடைந்துள்ளார். தற்போது டி ரூபா, கர்நாடக கைவினை பொருட்கள் மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.












Click it and Unblock the Notifications