ஹிஜாப் போராட்டம்.. கர்நாடகாவில் திங்கள் முதல் 9,10 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு!
பெங்களூர்: கர்நாடகாவில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு வரும் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் உடை அணிந்து முஸ்லீம் மாணவிகள் வர சில மாவட்டங்களில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக உடுப்பி, மங்களூர், சிக்மங்களூர், சிவமொக்கா மாவட்டங்களில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இதையடுத்து அங்குள்ள பல பியூ கல்லூரிகளும் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து இஸ்லாமியப் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் முஸ்லீம் மற்றும் இந்துத்துவ மாணவர்களுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதன் காரணமாகப் பதற்றத்தைத் தணிக்க அங்குக் கடந்த 3 நாட்களாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

இது தொடர்பான வழக்கில் ஹிஜாப், காவி உடை என எதையும் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்ட கர்நாடக ஹைகோர்ட், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சீருடையை மட்டுமே மாணவர்கள் அணிந்து வர வேண்டும் என்றும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கவும் உத்தரவிட்டது.
இந்தச் சூழலில், கர்நாடகாவில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு வரும் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
11 மற்றும் 12 ஆம் வகுப்புகள், ப்ரீ-யுனிவர்சிட்டி, அல்லது PU கல்லூரிகளைத் திறப்பது தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பாகவும் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
8 ஆம் வகுப்பு வரையில் மாணவர்களுக்குப் பள்ளிகள் வழக்கம் போலவே நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications