மீண்டும் கிளம்பும் ஹிஜாப் சர்ச்சை! கர்நாடகாவில் மாணவர்கள் திடீர் போராட்டம்! பரபரப்பில் பல்கலைக்கழகம்
பெங்களூர்: நமது அண்டை மாநிலமான சில மாத இடைவெளியில் இப்போது அங்கு மீண்டும் ஹிஜாப் விவகாரம் கிளம்பி உள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் தான் ஹலால் கறி விவகாரம் பிரச்சினையைக் கிளப்பி இருந்தது.
அதேபோல இந்து கோயிலுக்கு முன்பு இருந்த இஸ்லாமியர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவை அங்கு ஒருவித பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.
பூணூலுக்கு மட்டும் அனுமதியா? ஹிஜாப் தடையில்லை என அறிவிங்க - தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
ஹிஜாப் விவகாரம்
இந்தாண்டு தொடக்கத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பேசுபொருள் ஆனதை யாரும் மறந்து இருக்க முடியாது. அங்குள்ள சில பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. அப்படியே அந்தத் தடை அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. இதை எதிர்த்து ஒருபுறம் முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்த, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்துத்துவ மாணவர்கள் மறுபுறம் போராட்டம் நடத்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மங்களூர் பல்கலைக்கழகம்
இது தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு மாணவ- மாணவிகளும் சீருடை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் பின்னரே போராட்டம் சற்று ஓய்ந்தது. இந்தச் சூழலில் சில மாதங்களில் அங்கு மீண்டும் இப்போது ஹிஜாப் விவகாரம் எழுந்துள்ளது. முஸ்லீம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வருவதாகக் கூறி, இந்து மாணவ- மாணவிகள் சிலர் மங்களூர் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
மீண்டும் போராட்டம்
சுமார் 40 முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் உடை அணிந்து, கல்லூரிகளுக்கு வந்ததாகக் கூறி இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வகுப்புகளுக்கு வரும் முன்பு, அவர்கள் ஹிஜாப் உடையை அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்குத் தீர்வு காணும் வரை வகுப்புகளுக்குச் செல்ல மாட்டோம் என அறிவித்துள்ள இந்து மாணவர்கள், முஸ்லீம் மாணவர்கள் ஹிஜாப்களை அகற்ற வேண்டும் அல்லது அவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
விளக்கம் இல்லை
இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இதுவரை கல்லூரி நிர்வாகம் அல்லது அரசு சார்பில் எவ்வித விளக்கமும் வரவில்லை. இப்போது வரை சுமார் 40-50 இந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி ஹிஜாப்களை கழற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். மேலும், இது குறித்து கல்லூரி மேம்பாட்டுக் குழு உடனடியாகக் கூடி, ஹிஜாப்களை வளாகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்பதை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் விளக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
கர்நாடக நீதிமன்றம்
ஹிஜாப் தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் 15ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதிகள் ஜேஎம் காஜி மற்றும் கிருஷ்ணா தீட்சித் ஆகியோர் அடங்கிய அமர்வு முக்கிய தீர்ப்பை அளித்தது. அதாவது, "முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின் அத்தியாவசிய மத நடைமுறை இல்லை என்று நாங்கள் கருதுகிறோம். அமைதி, நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான ஆடைகளைத் தடைசெய்யும் உத்தரவைப் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.