தரமான கல்வி வழங்க கர்நாடகம் புதிய முயற்சி.. பேராசிரியர்கள் பாடம் நடத்துவதை வீடியோ எடுக்க உத்தரவு
பெங்களூரு: கர்நாடகாவில் இயங்கி வரும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு, பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எப்படி பாடம் நடத்துகிறார்கள் என்பதை வீடியோவில் படம் பிடித்து நிபுணர் குழுவுக்கு அனுப்ப மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவு அம்மாநிலத்தில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் அரசு மானியம் பெறும் கல்லூரிகளிலும், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மாநில அரசு கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகிறார்கள். அவர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்களால் புரிந்து கொள்ள முடிகிறதா, பேரரிரியர்கள் சரியான நேரத்திற்கு வகுப்பிற்கு வருகிறார்களா, அறிவியல் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசோதனை கூடத்தில் சரியாக ஆய்வுகளை சொல்லி கொடுக்கிறார்களா என்பதையெல்லாம் வீடியோ மூலம் பதிவு செய்து ஆராயும் திட்டத்தை அமல்படுத்த உள்ளது
கல்லூரியில் இருந்து அனுப்பப்படும் வீடியோக்களை பரிசீலனை செய்ய தனியாக குழு ஒன்றை நியமிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் இயங்கி வரும் 17 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உட்பட பலருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வகுப்பறையில் நடத்தும் பாடத்தை தெளிவாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை பெங்களூருவில் உள்ள நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதை பரிசீலனை செய்யும் குழுவினர் சில ஆலோசனைகளை பேராசிரியர்களுக்கு வழங்குவார்கள். அதை உடனடியாக விரைந்து செயல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது
கர்நாடக அரசின் இந்த உத்தரவு இளங்கலை முதுகலை பட்டப் படிப்புகளுக்கு மட்டுமல்லாமல், மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி அலோபதி ஆயுர்வேதம், வேளாண் கல்வி, பொறியியல், சிற்பக்கலை, ,நானோ தொழில்நுட்பம், நர்சிங் ,பாராமெடிக்கல், டிப்ளமோ உள்ளிட்ட பல கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications