கர்நாடகாவிலும் பாஜகவுக்கு ‛சம்மட்டி அடி’.. எழுச்சி பெற்ற காங்கிரஸ் - ஜேடிஎஸ்! முழு ரிசல்ட் இதோ
பெங்களூர்: கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகி உள்ளன. இதில் கடந்த 2019 தேர்தலை ஒப்பிடும்போது பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதேவேளையில் பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் மற்றும் தனித்து களமிறங்கி காங்கிரஸ் எழுச்சி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் அரியணை ஏறியது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் உள்ளார்.

அதேபோல் பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளார். ஜேடிஎஸ் கட்சியின் தலைவராக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளார். கர்நாடகாவை பொறுத்தவரை மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
இதில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. மாறாக பாஜகவும், ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்து களமிறங்கியது. இதில் கூட்டணி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பாஜக 25 இடங்களிலும், ஜேடிஎஸ் 3 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது. கர்நாடகாவில் 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கும், அதன்பிறகு மே 7 ம் தேதி 2வது கட்டமாக 14 லோக்சபா தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது 28 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட ஜேடிஎஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 28 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கிய ஆளும் கட்சியான காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தொகுதி வாரியாக பார்த்தால் பாஜகவில் பெலகாவியில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பாகல்கோட்டையில் கத்தி கவுடர், பிஜாப்பூரில் ரமேஷ் ஜிகஜினகி, ஹாவேரியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, தார்வாரில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, உத்தர கன்னடாவில் முன்னாள் சட்டசபை சபாநாயகர் விஷ்வேஸ்வரா ஹெக்டே காகேரி, சிவமொக்காவில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, உடுப்பி - சிக்கமகளூரில் கோட்டா சீனிவாச பூஜாரி உள்ளிட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தட்சின கன்னடாவில் கேப்டன் பிரிஜேஷ் சவுத்தா, சித்ரதுர்காவில் முன்னாள் அமைச்சர் கோவிந்த் கார்ஜோள், துமகூருவில் முன்னாள் அமைச்சர் சோமண்ணா, மைசூரில் மன்னர் வாரிசான இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ உடையார். பெங்களூர் புறநகரில் தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத், பெங்களூர் சென்ட்ரலில் பிசி மோகன், பெங்களூர் தெற்கில் பாஜக இளைஞர் அணி பிரிவின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, சிக்கபள்ளாப்பூரில் முன்னாள் அமைச்சர் சுதாகர், பெங்களூர் வடக்கில் முன்னாள் அமைச்சர் ேஷாபா கரந்தலாஜே உள்ளிட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் குமாரசாமி மண்டியா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் கோலார் தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளர் மல்லேஷ் பாபு வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் ஹாசன் தொகுதியில் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்ட பிரசிட்டிங் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்துள்ளார். இவரது தோல்விக்கு தேர்தலுக்கு முன்பு பரவி ஆபாச வீடியோக்கள் முக்கிய காாரணமாகி உள்ளது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். சிக்கோடி தொகுதியில் அமைச்சர் சதீஷ் ஜார்கிகோளியின் மகள் பிரியங்கா, குல்பர்காவில் மல்லிகார்ஜுன கார்கோவின் மருமகன் ராதாகிருஷ்ணா, ராய்ச்சூரில் குமார் நாயக், பீதரில் அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரேவின் மகன் சாகர் ஈஸ்வர் கண்ட்ரே, கொப்பலில் ராஜசேகர் பசவராஜ் ஹிட்னால், பல்லாரியில் துக்காராம், தாவணகெரேவில் அமைச்சர் மல்லிகார்ஜுனனின் மனைவி பிரபா மல்லிகார்ஜுன், ஹாசனில் ஸ்ரேயாஸ் எம் படேல், சாமராஜநகரில் அமைச்சர் மகாதேவப்பாவின் மகன் சுனில் போஸ் உள்ளிட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் எடியூரப்பாவின் மகனும் சிட்டிங் எம்பியுமான ராகவேந்திரா மீண்டும் சிவமொக்காவில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வென்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ் குமாரை 2 லட்சத்து 43 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பெங்களூர் புறநகரில் காங்கிரஸ் சார்பில் டிகே சிவக்குமாரின் தம்பியும், சிட்டிங் எம்பியுமான டிகே சுரேஷ் போட்டியிட்ட நிலையில் அவர் தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத் பாஜக சார்பில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். டிகே சுரேசை அவர் 2 லட்சத்து 69 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
மைசூரில் பாஜக வேட்பாளராக மன்னர் வாரிசு யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ உடையார் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமணனை 1.39 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டமணி வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து களமிறங்கிய சிட்டிங் எம்பி உமேஷ் ஜாதவை 27,205 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸை விட பாஜக தான் அதிக இடங்களை கைப்பற்றி வருகிறது. 2014ல் பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், ஜேடிஎஸ் 2 இடங்களிலும் ஜெயித்தது. கடந்த 2019ல் பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், ஜேடிஎஸ் ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வென்றனர். இந்நிலையில் தான் இந்த லோக்சபா தேர்தலில் 2019 ரிசல்ட் முற்றிலுமாக மாறி உள்ளது.
ஏனென்றால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகளில் இந்த முறையும் காங்கிரஸை விட பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி தான் அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கருத்து கணிப்புகளில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணிக்கு 20 முதல் 25 இடங்கள் வரை கிடைக்கும் எனவும், காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 8 தொகுதிகள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பால் பாஜக -ஜேடிஎஸ் கட்சியினர் உற்சாகமடைந்த நிலையில் தற்போது நிலைமை மாறி உள்ளது. அதன்படி பாஜகவுக்கு 17 இடங்களும், ஜேடிஎஸ்க்கு 2 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வென்ற நிலையில் இந்த முறை கூடுதலாக 8 இடங்களை பிடித்துள்ளது. இதற்கு கடந்த ஆண்டு சட்டசபையில் வென்று ஆட்சியை பிடித்த பிறகு கர்நாடகா அரசு செய்த திட்டங்கள் தான் காரணமாகும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, பெண்களுக்கான இலவச பயண திட்டம், ரேஷனில் 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். இதனால் மக்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பினர். அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்











Click it and Unblock the Notifications