மசூதிகளுக்கு ஓகே.. கோவில்களிலும் அதிக சத்தத்தில் ஸ்பீக்கர் போடக் கூடாது.. பெங்களூர் இமாம் கோரிக்கை
பெங்களூரு: குறைவான ஒலியில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை கோயில்களிலும் பின்பற்ற வேண்டும் என பெங்களூரு ஜாமியா மசூதி தலைமை இமாம் தெரிவித்து உள்ளார்.
கர்நாடக கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து அடுத்தடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சனைகள் வெடிக்கத் தொடங்கி இருக்கின்றன.
கோயில் திருவிழாக்களில் இஸ்லாமிய வியாபாரிகள் கடை போட அனுமதிக்கக்கூடாது, இஸ்லாமிய கறிக்கடை வியாபாரிகள் ஹலால் செய்த கறி விற்கக்கூடாது, ஹலால் கறிக்கு தடை விதிக்க வேண்டும் என பஜ்ரங்தள் அமைப்பு போராட்டம் நடத்தியதுடன் வியாபாரிகளை தாக்கவும் செய்தது.
ஹலால் விவகாரத்தை விடுங்க.. மதுரையில் மாரியம்மன் கோயிலில் இஸ்லாமிய கொடி.. இதுதான் மதநல்லிணக்கம்!
ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு
இதனை தொடர்ந்து, மசூதிகளில் பாங்கு சொல்ல ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது என இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக உயர்நீதிமன்றமும் மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பிற பகுதிகளுக்கு ஒலிப்பெருக்கிகள் தொடர்பாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், எந்தெந்த இடங்களில் எவ்வளவு டெசிபல் கொண்ட ஒலிப்பெருக்களை பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
பெங்களூரு போலீஸ் நடவடிக்கை
இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அதிக ஒலி எழுப்பும் கருவிகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு காவல் ஆணையர் கமல்பந்த் தெரிவித்தார். நேற்றைய தினம் பெங்களூரு காவல்துறை 125 மசூதிகளுக்கும், 83 கோயில்களுக்கும், 22 தேவாலயங்களுக்கும், 59 உணவகங்கள், பார்கள், கேளிக்கை விடுதிகள் என மொத்தம் 301 நோட்டீஸ்களை அனுப்பியது.
கோயில்களும் பின்பற்ற வேண்டும்
இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும், பெங்களூரு ஜாமியா மசூதி தலைமை இமாமும் கதீபுமான முஹம்மது இம்ரான் ரஷதி தெரிவிக்கையில், "உச்சநீதிமன்றம் வழங்கிய அனைத்து உத்தரவுகளை நாங்கள் நிச்சயம் பின்பற்றுவோம். அதேபோல், கோயில்களும் பின்பற்ற வேண்டும். கோயில்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இந்த விதிகளை பின்பற்றால் நம் அனைவருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.
ஒலியை கட்டுப்படுத்த சாதனம் உள்ளது
பாகுபாடுகளை களைந்துவிட்டு நாம் அனைவரும் நம் நாட்டின் வளர்ச்சிக்காக ஒற்றுமையோடு பணியாற்ற வேண்டும். மசூதிகளில் பொறுத்தப்பட்டு இருக்கக்கூடிய ஒலிபெருக்கிகளில் தேவைக்கு ஏற்ப ஒலியை கூட்டவும், குறைக்கவும் செய்யும் சாதனங்களை நாம் ஏற்பாடு செய்து இருக்கிறோம். எனவே இனி அதிக ஒலி வருகிறது என்ற பிரச்சனை இருக்காது." என்றார்.