எகிறப்போகும் பால் விலை? லிட்டருக்கு ரூ.5 வரை அதிகரிக்க திட்டம்.. அளவை குறைக்கவும் முன்மொழிவு
பெங்களூர்: கர்நாடகா அரசு நிறுவனமான நந்தினி சார்பில் விற்பனை செய்யப்படும் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட பிறகு 1 லிட்டர் 50 மில்லியாக இருந்த பாக்கெட் பால் இனி 1 லிட்டராக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொள்ள உள்ளனர்.
தமிழக அரசின் பால்வளத்துறை சார்பில் ‛ஆவின்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் கர்நாடகாவில் கூட்டுறவுத்துறை சார்பில் கர்நாடகா பால் கூட்டமைப்பு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பு சங்கம் சார்பில் ‛நந்தினி' பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நந்தினி என்ற பெயரில் பால் மட்டுமின்றி தயிர், நெய், ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆவின் பால் உள்பட பிற பெருட்கள் எவ்வளவு பேமஸாக உள்ளதோ அதேபோல் கர்நாடகாவில் ‛நந்தினி' பால் மற்றும் பொருட்களுக்கு பொதுமக்களுக்கு நல்ல வரவேற்பு என்பது உள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் நந்தினி பால் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான முன்மொழிவு என்பது கர்நாடகா பால் கூட்டமைப்பு (Karnataka Milk Federation or KMF) சார்பில் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் இப்போது 1,050 மில்லி லிட்டரில் பாக்கெட் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அளவை 50 மில்லி குறைத்து 1000 மில்லி லிட்டர் அதாவத ஒரு லிட்டர் என்ற அளவில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது 1 ஒரு லிட்டர் 50 மில்லி என்ற விற்பனை செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டின் விலை என்பது 42 என்ற அளவில் உள்ளது. இதனை வரும் நாட்களில் ரூ.5 வரை உயர்த்தி ரூ.47 க்கு விற்பனை செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு கர்நாடகா அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கான விலை உயர்வாக இது அமையும். அதாவது கடந்த 2022ம் ஆண்டில் இருந்து நந்தினி பால் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன்பிறகு 2023ல் பால் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 2024ல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. அதோடு 50 மில்லி கூடுதலாக சேர்க்கப்பட்டு ஒரு லிட்டர் பால் 1,050 மில்லி லிட்டராக விற்பனை செய்யப்பட்டது. இதனால் இப்போது ரூ.5 லிட்டருக்கு உயர்த்தப்பட்டால் அது இதுவரை இல்லாத விலை உயர்வாக அமையும்.
கர்நாடகாவில் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் என்பது மார்ச் மாதம் 7 ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த விலை உயர்வுக்கு அரசு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் கர்நாடகா பட்ஜெட்டுக்கு பிறகு இது நடைமுறைக்கு வரும். இந்த விலை உயர்வால் நந்தினி பால் வாங்கும் மக்களுக்கு கூடுதல் பணம் செலவாகும். இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி தற்போது கர்நாடகா அரசு தொடர்ந்து விலை உயர்வை அமல்படுத்தி வருகிறது. சமீபத்தில் காபி பவுடர், பிஎம்டிசி பஸ் டிக்கெட், மெட்ரோ டிக்கெட், குடிநீர் வரி, மின் கட்டணம் உள்ளிட்டவற்றை கர்நாடகா அரசு உயர்த்தியது. அந்த வரிசையில் இப்போது பால் விலையும் உயர்த்த அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications