மாணவிகள் பள்ளி வளாகம் வரை 'ஹிஜாப்' அணிந்து வரலாம்.. அதன்பிறகு?.. கர்நாடக அமைச்சர் போட்ட 'கண்டிஷன்'
பெங்களூர்: அரசியல் கட்சிகளின் கைகளில் 'கருவிகள்' ஆக வேண்டாம் என மாணவர்களுக்கு கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீருடை விதிகளை கடைப்பிடிக்க விரும்பாத மாணவர்கள் வேறு வழிகளை ஆராயலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
3 டோஸ் வேணாம், இனி சிங்கில் டோஸ் போதும்.. ஒரு டோஸ் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிகளுக்கு வருவதற்கு எதிராக சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.இதனால் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள், குல்லா, ஹிஜாப், பருதா, புர்கா போன்றவை அணிந்து கல்லூரிகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஹிஜாப் விவகாரம்
கடந்த ஆண்டு இறுதியில் உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் பல நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். ''ஆடை அணிவது என்பது எங்களின் உரிமை. இதனை யாரும் தடுக்க முடியாது'' என்று அவர்கள் கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர்.
அதிரடி உத்தரவிட்ட கர்நாடக அரசு
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால், ''நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம்'' என்று கூறி சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். சில மாணவிகள் காவி துப்பட்டா அணிந்து வந்தனர். இதனால் கர்நாடகா முழுவதும் பதற்றம் நிலவியதால் கல்வி நிறுவனங்களில் அமைதி, நல்லிணக்கம், சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான ஆடைகளுக்கு தடை விதித்து கர்நாடக அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதாவது மாணவ-மாணவிகள்பொதுவான சீருடை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.
வேறு வழிகளை ஆராயலாம்
இந்த நிலையில் சீருடை விதிகளை கடைப்பிடிக்க விரும்பாத மாணவர்கள் வேறு வழிகளை ஆராயலாம் என்று மாநில கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் தெரிவித்துள்ளார். ''இராணுவத்தில் விதிகள் பின்பற்றப்படுவது போல், இங்கும் (கல்வி நிறுவனங்களில்) பின்பற்றப்பட வேண்டும். இதைப் பின்பற்ற விரும்பாதவர்களுக்கு விருப்பத்தேர்வுகள் உள்ளன, அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று மைசூரில் நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறினார்.
பள்ளி வகுப்பறையில் அணிய கூடாது
அரசியல் கட்சிகளின் கைகளில் 'கருவிகள்' ஆக வேண்டாம் என மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர் நாகேஷ், இந்த விஷயத்தில் அரசு தெளிவுபடுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து சுற்றறிக்கையை வெளியிட்டது என்று கூறியுள்ளார். மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரலாம், ஆனால் பள்ளி வளாகத்திற்குள் வந்தவுடன் அவர்கள் அதை தங்கள் பைகளில் வைக்க வேண்டும். பள்ளி வகுப்பறையில் ஹிஜாப் அணிய கூடாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
மத வேறுபாடுகள் தோன்றவில்லை
''சம்பவம் நடந்த உடுப்பி பள்ளியில், 92 முஸ்லீம் குழந்தைகளில், ஆறு பேர் மட்டுமே ஹிஜாப் அணிந்து 'விஷ விதைகளுக்கு' பலியாகினர். மற்ற குழந்தைகள் பள்ளி சீருடையில் பள்ளிக்கு வந்தனர்' என்று கூறிய அமைச்சர் நாகேஷ், அனைவரும் சமத்துவ உணர்வுடன் ஒன்றாகக் கற்றுக்கொண்டு விளையாடுகிறார்கள், ஆனால் ஒருபோதும் மத வேறுபாடுகள் தோன்றவில்லை என்று உறுதிபடுத்தினார்.
Recommended Video
அரசியலாக்கியது காங்கிரஸ்
முஸ்லீம் மாணவர்கள் படிப்பைத் தொடர பாஜக அரசு விரும்பவில்லை என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை நிராகரித்த நாகேஷ்,''கர்நாடகா கல்விச் சட்டம் பாஜகவால் கொண்டுவரப்பட்டது அல்ல, மாநிலத்தில் அதிகபட்சமாக ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸால் கொண்டுவரப்பட்டது. அரசியல் ஆதாயங்களுக்காக சமூகத்தில் பிளவுகளை உருவாக்க வேண்டாம் என்று காங்கிரஸை அவர் கேட்டுக் கொண்டார்.