Rahul Gandhi: இங்க பொருளாதார புயல் உருவாகிக்கிட்டு இருக்கு.. மோடி இத்தாலியில் ரீல்ஸ் எடுத்துகிட்டு இருக்கார்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி பயணத்தில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு 'மெலோடி' சாக்லேட் பரிசளித்து இரு தலைவர்களும் சிரித்து மகிழ்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "நமது தலையில் பொருளாதாரப் புயல் மூண்டு கொண்டிருக்கிறது. ஆனால் நமது பிரதமர் இத்தாலியில் சாக்லேட் பரிசு கொடுத்து ரீல்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டார். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் அனைவரும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்போது பிரதமர் சிரித்துக் கொண்டிருப்பதாகவும், இது தலைமைத்துவம் அல்ல, வெறும் நாடகம் என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ள நிலையில், மெலோனிக்கு பார்லே நிறுவனத்தின் பிரபல 'மெலோடி' சாக்லேட் பாக்கெட்டை பரிசாக அளித்தார். 2024ஆம் ஆண்டு மெலோனி இந்தியா - இத்தாலிக்கு மத்தியிலான நட்புறவை 'மெலோடி' (Meloni + Modi) என்று குறிப்பிட்டார். இதை நினைவூட்டும் வகையில் இந்தப் பரிசு மோடி மெலோனிக்கு அளித்தார். இதை மெலோனி டிவிட்டரில் வீடியோவாக பகிர்ந்தார் "பிரதமர் மோடி எங்களுக்கு மிகவும் நல்ல டாபி கொண்டு வந்துள்ளார்" என்று கூற, இதன் பெயர் என்ன தெரியுமான கேட்க மோடி மெலோடி என்று சொன்னது இருவரும் சிரித்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால் இந்த நேரத்தில் நாட்டில் பொருளாதார சிக்கல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை, உர விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் "இந்தியாவில் கண்ணுக்கு தெரியாத பொருளாதார மந்தநிலை (Recession) வருகிறதா? மீண்டும் லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் வருமா?" என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
இதேவேளையில் கடந்த வாரம் மோடி நாட்டு மக்களை அன்னிய செலவணி பயன்பாட்டை குறைக்க நாட்டு மக்கள் தேவையற்ற வெளிநாட்டு பயணத்தை குறைக்க வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் மோடி 5 நாடுகள் பயணத்திற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.
விவசாயிகள் உரம் கிடைக்காமலும், விலை அதிகமானதால் அவதிப்படுகின்றனர். சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் வருமானம் குறைந்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர். இந்தப் பின்னணியில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் அங்கு நடைபெற்ற நட்பு ரீல்கள் பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
ராகுல் காந்தியின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் இரு நாடுகளுக்கான உறவை வலுப்படுத்தும் பயணம் என்று பாஜக தரப்பு நியாயப்படுத்த, மறுபுறம் உள்நாட்டுப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
பொதுமக்கள் மத்தியில் தற்போது மிக முக்கியமான கேள்வி - பெட்ரோல், டீசல், உரம், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை அரசு எப்படி கையாளப் போகிறது என்பதுதான். இந்தப் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், சாமானிய மக்களின் வாழ்க்கை இன்னும் கடினமாகிவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.















Click it and Unblock the Notifications