முஸ்லிம்கள் 4% இடஒதுக்கீடு ரத்து ஆணை மே- 9 வரை நிறுத்தி வைப்பு: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு
பெங்களூர்: கர்நாடகா முஸ்லிம்களின் 4% இடஒதுக்கீடு ரத்து வழக்கின் மறு விசாரணையை வரும் மே 9 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதுவரையிலும், இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை அமல்படுத்த வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 4 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த தனி இட ஒதுக்கீட்டை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு சமமாக பிரித்து வழங்கியது.

கர்நாடகா அரசியலில் ஒக்கலிகர், லிங்காயத் சமூகத்தினருக்கு பெரிய செல்வாக்கு உண்டு. இந்தச் சமூகத்தவரின் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது. எனினும், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்த கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பின் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய நான் தயாராக உள்ளேன். இருந்தாலும் அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வரும் தன்பாலின சேர்க்கை வழக்கில் நான் ஆஜராக வேண்டியுள்ளது. அதனால் இந்த வழக்கை வேறு நாள் விசாரணைக்கு ஒத்திவைக்க வேண்டும்" என்று அவகாசம் கோரினார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். துஷ்யந்த் தாவே கூறுகையில், "சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் இந்த வாதத்தை ஏற்க கூடாது. இந்த வழக்கு இதுபோன்று நான்கு முறை இப்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒத்திவைத்தால் இந்த வழக்கு விடுமுறை காலத்தை தாண்டி செல்லும்" என்றார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் மே 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரையிலும், இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை அமல்படுத்த வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. கர்நாடக அரசும், மே 9 ஆம் தேதி வரையில் புதிய நியமனங்கள், அட்மிஷன்கள் எதுவும் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படாது என்று உறுதி அளித்தது.












Click it and Unblock the Notifications