டிகே சிவகுமார்... எத்தனை போராட்டம்- காங் மேலிடத்தின் பெரு நம்பிக்கைக்குரிய தளபதி- பாஜகவின் பரம வைரி!
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் முதல்வர், துணை முதல்வர் பதவிக்கான பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்க உள்ளனர்.
கடந்த காலங்களில் வழக்குகளைக் காரணம் காட்டி சிவக்குமாருக்கு பதவிகள் மறுக்கப்பட்டன; அதே காரணத்தை காட்டி தமக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்ட போது இடைவிடாது உரிமைக்காக போராடினார் டிகே சிவகுமார்.

டிகேஎஸ் எனும் டிகே சிவக்குமார் (சிவகுமார்) - 1962-ம் ஆண்டு மே 15-ந் தேதி கனகபுராவில் தொட்டலஹல்லி கெம்பே கவுடா, கவுரம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் டிகே சிவகுமார். கர்நாடகாவில் 2-வது பெரும்பான்மை சமூகமான- ஜாதியான ஒக்கலிகா கவுடாவை சேர்ந்தவர் டிகே சிவகுமார். முதலாவது பெரும்பான்மை ஜாதி லிங்காயத்துகள்.
1980களில் மாணவர் பருவத்தில் காங்கிரஸில் இணைந்து டிகே சிவகுமாரின் அரசியல் பயணம் தொடங்கியது. தமது 27 வயதில் 1989-ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். மைசூரு மாவட்டத்தின் சாத்தனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 1994, 1999, 2004 தேர்தல்களிலும் சாத்தனூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக வாகை சூடினார். 2008, 2013, 2018 மற்றும் தற்போதைய தேர்தல்களில் கனகபுரா தொகுதியில் போட்டிட்யிட்டு மகுடம் சூட்டி இருக்கிறார்.
அதுவும் கனகபுராவில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றவர் டிகே சிவகுமார். இத்தேர்தலில் மொத்தம் 142156 வாக்குகள் பெற்றார் டிகேஎஸ். அதாவது பதிவான வாக்குகளில் சுமார் 75% வாக்குகளை டிகேஎஸ் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களுமே டெபாசிட்டை பறிகொடுத்தனர். அதுவும் கனகபுராவில் டிகேஎஸ்ஸை வீழ்த்த கங்கணம் கட்டி பாஜக களமிறக்கிய ஒக்கலிகா கவுடாவை சேர்ந்த மூத்த பாஜக தலைவ அசோக் வெறும் 19602 வாக்குகள்- 10.62% மட்டுமே பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார். இத்தேர்தலில் மிக அபாரமான வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைத்திருப்பவர் டிகேஎஸ்.
அத்துடன் மட்டுமல்ல.. காங்கிரஸ் மேலிடத்தின் மிகுந்த நம்பிக்கைக்குரிய களத் தளபதி. மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் பாஜகவை எதிர்த்து உக்கிரமாகக் களமாடக் கூடியவர். காங்கிரஸ் மேலிடம் கட்டி வா என்றால் வெட்டி வரக் கூடிய போர்ப்படை தளபதி டிகேஸ்.
2002-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசுக்கு சிக்கல் ஏற்பட்ட போது எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்து அரசாங்கத்தை காப்பாற்றிய போது டிகே சிவகுமார் பெயர் பெரிதும் உச்சரிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலின் போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்தவர் டிகே சிவகுமார். கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்ட போது எம்.எல்.ஏக்களுக்காக மும்பையில் வீதியில் இறங்கி மல்லுக்கட்டியவர் டிகே சிவகுமார். தமது சொத்து ரூ1413 கோடி என பகிரங்கமாக அறிவித்தவர்.
டிகேஎஸ் மீது அடுத்தடுத்த வழக்குகள், விசாரணைகள் என பாஜக அரசு அலைக்கழித்த போது ஒட்டுமொத்த ஒக்கலிகா கவுடா ஜாதியினரும் பெங்களூரு நகரை முற்றுகையிட்டு பிரம்மாண்டமாக நடத்திய பேரணி மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
2020-ம் ஆண்டு முதல் கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்து வருகிறார். மத்திய விசாரணை ஏஜென்சிகள் அனைத்தும் டிகே சிவகுமார் மீது வழக்குகள் போட்டுள்ளன. 2019-ம் ஆண்டு அமலாக்கத்துறையால் டிகே சிவகுமார் கைதும் செய்யப்பட்டார்.
இப்படி காங்கிரஸே மூச்சு என போராடிக் கொண்டிருக்கும் சிவக்குமார், முதல்வர் பதவிக்கான போட்டியில் தன்னை முன்னிறுத்திக் கொண்டதில் வியப்பேதும் இல்லை. முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு முட்டுக்கட்டையாக நிற்காமல் விலகிக் கொண்டு துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டதிலும் வியப்பேதும் இல்லை என்கின்றனர் கர்நாடகா அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications