போலீஸ் ஸ்டேஷனிலேயே இப்படி பண்ணலாமா? அத்துமீறிய காவலர்.. கையும் களவுமா மாட்டிக்கிட்டாரே! வீடியோ
கோலார்: கர்நாடகாவில் காவல் நிலையத்தில் வைத்தே போலீஸார் மது அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகத்தில் நிலவும் குற்றங்களையும், தவறுகளையும் களைவதற்காகவே காவல்துறை என ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், நாட்டில் தற்போது நிலவும் சூழலை பார்க்கும் போது, குற்றங்களை தடுக்க போலீஸார் இருக்கிறார்களா அல்லது குற்றம் புரிவதற்காக போலீஸார் இருக்கிறார்களா என கேள்வி கேட்கும் அளவுக்கு மாறிவிட்டது.
சென்னையில் ஒரு வங்கிக் கொள்ளையில் காவல் அதிகாரி உடந்தையாக இருந்திருக்கிறார்; சிறுமியை 8 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்படுகிறார்; ரவுடி ஒருவர் வைக்கும் விருந்து நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ஒருவர் பங்கேற்கிறார் என்பன போன்ற செய்திகள் தினமும் நாளிதழ்களில் அடிபட்டு விடுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது வேலியே பயிரை மேய்வது என்ற பழமொழி மிகவும் சரியாக இருக்கிறது.

காவல்துறையில் கறுப்பு ஆடுகள்
குற்றங்களை தடுக்க வேண்டிய போலீஸாரே குற்றவாளிகளாக இருந்தால் சமூகம் எப்படி இருக்கும்? குற்றங்கள் எப்படி குறையும்? என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய நபர்களை களையெடுத்தாலே ஒழிய குற்றங்களும், குற்றவாளிகளும் குறைய வாய்ப்பே இல்லை. இதுபோல், காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் சம்பவம்தான் கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது.

மிக முக்கியமானது இரவுப் பணி
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கவுலிப்பள்ளி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவுப் பணியில் சில போலீஸார் இருந்துள்ளனர். குற்றங்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் ரோந்து செல்வதும், இரவு நேரத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள், தீவிரவாதிகள் தப்பிச் சென்று விடாமல் வாகனத் தணிக்கை உள்ளிட்ட பணிகளை செய்வதுமே இரவுப் பணியில் போலீஸாருக்கு இருக்கும் முக்கியப் பணி.

மது பார்ட்டி...
ஆனால், கவுலிப் பள்ளி காவல் நிலையத்தில் பணியில் இருந்த செலபதி, அஞ்சி, மஞ்சுநாத் ஆகிய 3 போலீஸார் மேஜையில் இருக்கும் கோப்புகளை கீழே தள்ளிவிட்டு, அதில் மது பாட்டில்களை அடுக்கி வைத்து மது அருந்துகின்றனர்.
இதனை அவர்களே வேடிக்கையாக வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ எப்படியோ இன்று சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது.

துறை ரீதியான விசாரணை
பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்தும் ரீட்வீட்டும் செய்துள்ளனர். மேலும், காவல் நிலையத்தையே ஒயின் ஷாப் போல மாற்றிய அந்த போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸார் மற்றும் அந்த காவல் நிலைய அதிகாரிகளிடம் இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கர்நாடகா டிஜிபி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications