பெரும்பான்மையை இழந்த கர்நாடக அரசு.. உட்கார்ந்த இடத்திலேயே மேஜிக் நம்பரை தொட்டது பாஜக!
Recommended Video
பெங்களூர்: கர்நாடக அரசியலில் பெரும் புயல் வீசிக் கொண்டுள்ளது. இப்போது எல்லாமே நம்பர் கேம்தான். காங்கிரசை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவை சேர்ந்த மூன்று பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். ஆட்சிக்கு ஆதரவளித்த சுயேச்சை ஒருவர் ஆட்சிக்கு ஆதரவு இல்லை என அறிவித்துள்ளார். ஆக மொத்தம் 14 எம்எல்ஏக்களை இழந்துள்ளது, கர்நாடக காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு.
கர்நாடக சட்டசபை பலம் 224. அதில் 13 பேர் ராஜினாமா செய்துவிட்டனர். சபாநாயகர் இந்த ராஜினாமாக்களை ஏற்றால், சட்டசபை பலம், 211ஆக குறையும். அதில் பாதிக்கும் மேல் என்றால் ஆட்சியை தக்க வைக்க குறைந்தது 106 எம்எல்ஏக்களாவது தேவை.
இப்போது காங்கிரஸ் பலம் 69 எனவும், மஜத பலம் 34 எனவும் உள்ளது. ஆதரவு அளித்த சுயேச்சைகளில் ஒருவர் கைவிட்டாலும் இன்னொருவர் ஆதரவு உள்ளது. எனவே, இந்த கூட்டணியின் பலம் 104 எம்எல்ஏக்களாகும். ஆனால் பாஜக எம்எல்ஏக்கள் பலம் 105. இதுபோக, நாகேஷ் என்ற சுயேச்சை எம்எல்ஏ இன்று, கூட்டணி ஆட்சிக்கு அளித்த ஆதரவை பாபஸ் பெற்றுவிட்டு, பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.
எனவே, உட்கார்ந்த இடத்திலேயே, பாஜகவுக்கு தேவையான மேஜிக் நம்பரான 106 கிடைத்துவிட்டது. இப்போது சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு, சபாநாயகரோ அல்லது ஆளுநரோ அழைப்பு விடுத்தால், பாஜக எளிதாக வென்றுவிடும்.
'கடத்திய' எடியூரப்பா உதவியாளர்.. போனில் 'கதறிய' சுயேச்சை எம்எல்ஏ.. ஏர்போர்ட்டுக்கு ஓடிய அமைச்சர்
ஒருவேளை, பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் யாராவது காங்கிரஸுக்கு ஆதரவாக ராஜினாமா செய்தால்தான், இந்த எண்ணிக்கை மாறும். ஆனால் அதற்கு வாய்ப்பு ரொம்ப கம்மி.
காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் தாங்கள் பாஜகவுக்கு ஆதரவாகவே ராஜினாமா செய்துள்ளோம் என்று எந்த இடத்திலும் அறிவிக்கவில்லை. எனவே அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.
தங்களது தனிப்பட்ட காரணத்திற்காக ராஜினாமா செய்வதாக ஒவ்வொரு எம்எல்ஏவும் தனித்தனியாக ராஜினாமா செய்துள்ளனர். எனவே, டிடிவி தினகரனுடன் இணைந்து, அதிமுகவுக்கு எதிராக கலகம் செய்தவர்கள் மீது எடுக்கப்பட்டதை போன்ற நடவடிக்கையை இவர்கள் மீது எடுக்க முடியாது என்கிறார்கள், கர்நாடக அரசியல் வல்லுநர்கள்.