கர்நாடக தேர்தல் முடிவையே இதான் தீர்மானிக்கும்! மதம்தான் 1st.. 2வது என்ன தெரியுமா? தமிழ்நாடு கனெக்சன்
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக ஹிஜாப் உள்ளிட்ட மதம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கும் என்று ஏபிபி சேனல் - சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அங்கு பிரச்சாரம் தீவிரம் அடைந்து உள்ளது.
அங்கே ஹிஜாப் விவகாரம், பெங்களூரில் திட்டங்களுக்கு கமிஷன் பெற்ற விவகாரம், மத மோதல், ஜாதி ரீதியிலான மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக தேர்தல்
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வருவதற்கு ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், சில நாட்களிலேயே இந்த விவகாரம் கர்நாடகாவில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் காட்டுத் தீ போல பரவியதுடன், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாபை அணிந்து வர கர்நாடாகா அரசு தடைவிதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றமும் இந்த தடை செல்லும் என்று அறிவித்தது.

தடை செல்லும்
இது போக உடுப்பியில் உள்ள ஹொஸா மார்குடி கோவிலில் நடக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது.இங்கு எல்லா வருடமும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கடை போட்டு வந்தனர். இந்த வருடம் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகாவில் ஹலால் பொருட்களை வாங்க கூடாது என்றும் இந்துக்கள் இடையே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இது போக இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இப்படி இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையிலான பிரிவினை, மத மோதல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. இந்த நிலையில்தான் அங்கு வழிபாட்டு தளங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் சிக்மங்களூர் நகராட்சியில் இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மதம்
தற்போது பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவின் மற்ற பகுதிகளிலும் மசூதிகள், சர்ச்கள், கோவில்களில் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. காற்று மாசு ஏற்படுத்துவதாக கூறி இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மசூதிகளில்தான் அதிகமாக ஸ்பீக்கர் இருக்கும் என்பதால் அங்கே இந்த தடை தீவிரமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. அங்கே மதம் பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக மதம்தான் இருக்கும் என்று ஏபிபி சேனல் - சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன கணிப்பு
அவர்கள் வெளியிட்டுள்ள கணிப்பில்,
லிங்காயத்து விவகாரம் - ஹிஜாப் மோதல் , மத பிரச்சனை - 55.4 சதவிகிதம் பாதிப்பை ஏற்படுத்தும்.
இரண்டாவது விஷயம் தமிழ்நாடு உடன் உள்ள காவிரி பிரச்சனை - 14.6 சதவிகிதம் பாதிப்பை ஏற்படுத்தும்.
நிகழ்கால ஆட்சியின் நிர்வாகம் - 13.3 சதவிகிதம்
கிரைம் விவகாரம் - 6.1 சதவிகிதம்
தேசிய பிரச்சனைகள் -6.8 சதவிகிதம்

எடியூரப்பா
இந்த நிலையில்தான் கர்நாடகாவில் பாஜக தோல்வி அடையும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏபிபி- சி வோட்டர் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏபிபி சேனல் மற்றும் டி வோட்டர் வெளியிட்ட கருத்து கணிப்பில், மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் 127 இடங்கள் வரை அதிகபட்சம் பெற்று காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக - 68 - 80
காங்கிரஸ் 115-127
மதசார்பற்ற ஜனதா தளம் 23-35
என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதாவது காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றிபெற்று அங்கே ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இந்த நிலையில் பாஜகவிற்கு கண்டிப்பாக மெஜாரிட்டி கிடைக்காது. பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதும் கடினம். பெரும்பாலும் காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெறும் என்று இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications