கர்நாடகா 'இரட்டை வேடம்'..காவிரி நீர் திறப்பை பட்டுன்னு பாதியாக குறைத்தது..அணைகள் நீர்மட்டம் குறையலை!
பெங்களூர்: காவிரி ஒழுங்காற்று குழு கூடிய நிலையில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீரை திறந்துவிட்ட கர்நாடகா தற்போது அந்த அளவை பாதியாக குறைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிய அளவான வினாடிக்கு 24,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட மறுத்தது. இதனையடுத்து காவிரி ஒழுங்காற்று குழு ஆய்வு நடத்தி தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடிநீரை திறந்துவிட பரிந்துரைத்தது. இதனை காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

கர்நாடகா போராட்டம்: ஆனால் காவிரியில் போதுமான நீரை கர்நாடகா திறக்கவில்லை. இதற்கு காரணமாக கர்நாடகா பாஜக தூண்டிவிட்ட கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகளின் போராட்டங்கள் சொல்லப்பட்டன. தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் திறக்கப்படாத நிலையில் காவிரி டெல்டாவில் பயிர்கள் கருகிப் போயின. ஆனாலும் ஈவிரக்கமே இல்லாமல் கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரையும் திறக்கக் கூடாது என போராட்டங்கள் தொடர்ந்தன.
3,000 கன அடி நீர்: இதனிடையே தற்போது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 16,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தியது தமிழ்நாடு. ஆனாலும் இம்முறையும் 3,000 கன அடிநீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. இதனடிப்படையில் இன்று கூடும் காவிரி மேலாண்மை ஆணையமும் 3,000 கன அடி நீரை பரிந்துரைக்க உள்ளது.
கூடுதல் நீர் திறப்பு: இதனிடையே தமிழ்நாட்டுக்கு கடந்த சில நாட்களாக திடீரென கூடுதல் காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டது. காவிரியில் வினாடிக்கு 8615 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டது. மேலும் தமிழ்நாட்டின் மேட்டூர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று கூடுதலாக இருந்தது.

நீர் திறப்பு குறைப்பு: தற்போது திடீரென தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் திறப்பை வெகுவாக குறைத்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 4698 கன அடி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
கர்நாடகா அணைகள் நீர் இருப்பு: கர்நாடகாவின் கேஆர்எஸ் (கிருஷ்ணராஜ சாகர்) அணையில் தற்போது 100.64 அடி நீர் உள்ளது. கபினி அணையில் 57.2 அடி நீர் இருக்கிறது. இந்த அணைகளின் காவிரி நீர் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து சேரும் மேட்டூர் அணையிலோ வெறும் 33.1 அடி நீர் மட்டுமே உள்ளது. இவ்வளவு காவிரி நீரை அடைத்து வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீரை கூட திறக்க முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிடுவோம் என்கிறது கர்நாடகா. இதைவிட பெருங்கொடுமை வேறேது?












Click it and Unblock the Notifications