கர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு!
கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா தனி செயலாளர் பெங்களூரில் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா தனி செயலாளர் பெங்களூரில் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஜி பரமேஸ்வரா. இவர் கடந்த காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியின் போது, கர்நாடகாவில் துணை முதல்வராக இருந்தார். இந்த நிலையில் நேற்று இவரின் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது.
100க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுப்பட்டனர். இவருக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை நடந்தது. பெங்களூர், மைசூர், துமுக்கூர் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடந்தது. இதில் மொத்தம் 4.25 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சோதனை இன்றும் தொடரும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் தனி செயலாளர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தன்னுடைய உறவினருக்கு சொந்தமான தனியார் கல்லூரி அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று இவர் வீட்டிலும் சோதனை நடந்தது. வருமான வரி சோதனைகள் நடைபெற்ற நிலையில் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார், தற்கொலைக்கு காரணம் என்ன என்ற விவரம் வெளியாகவில்லை. இவரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.