ஆஹா குமாரசாமி அரசுக்கு சாதகமான சூழல்.. இழுபறியால் ஆளுநரிடம் பாஜக முறையீடு
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் இழுபறி நீடிப்பதால் ஆளுநரிடம் பாஜக முறையீடு செய்கிறது.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு என்னென்ன கூத்துகள் நடந்தனவோ அவையெல்லாம் தற்போது கர்நாடகத்திலும் நடந்து வருகிறது. என்னவொரு வித்தியாசம் என்றால் தமிழகத்தில் சசிகலாவின் தலைமையை ஏற்க மறுத்த சிலர் தர்மயுத்தம் நடத்தினர்.
ஆனால் இங்கோ அதிகார போட்டி, முக்கிய இலாகா ஒதுக்கீடில்லை, அமைச்சர் பதவி இல்லை என கூறி கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மஜத கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர்.

கர்நாடக சபாநாயகர்
இவர்களது ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுத்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க கர்நாடக சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது.

தீர்ப்பு
அது போல் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் இன்றைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

ராமலிங்க ரெட்டி
இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு மும்பை சொகுசு விடுதிக்கு சென்ற அதிருப்தி எம்எல்ஏக்கள், உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். நாங்கள் சட்டசபைக்கு செல்ல மாட்டோம் என பேட்டி அளித்திருந்தனர். இந்த நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ராமலிங்க ரெட்டி தமது ராஜினாமா முடிவை வாபஸ் பெறவுள்ளதாக கூறியுள்ளார்.

தேடுதல்
காங்கிரஸ் கட்டுப்பாட்டு ரிசார்டில் இருந்து எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல் திடீரென காணாமல் போனதால் அவரை தேடும் பணிகள் நடைபெற்றன. இவரிடம் நேற்று இரவு முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வர் ஆகியோர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சபாநாயகர் முடிவு
இவர்களை போல் இன்னும் முனிரத்னா, பசவராஜ், ஆனந்த் சிங், கே சுதாகர் ஆகிய அதிருப்தி எம்எல்ஏக்களும் காங்கிரஸுக்கு திரும்பக் கூடும் என தகவல்கள் கூறுகின்றன. இதுபோல் ஒவ்வொரு எம்எல்ஏக்களாக திரும்பி வரக் கூடும் என்பதால் இன்று அவை கூடும் போது நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் ஒத்தி வைக்கலாம். இதனால் குமாரசாமி அரசுக்கு இரு நாட்கள் ஆயுள் நீளும் என எதிர்பார்க்கப்பட்டது.

சந்தேகம்
இந்த நிலையில் இன்று காலை சட்டசபை கூடியதும் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை வாசித்தார். அப்போது சித்தராமையா, சபாநாயகருக்கு எந்த உத்தரவையும் போட முடியாது என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என சொல்வது சந்தேகத்தை எழுப்புகிறது.

ஆளுநருடன் சந்திப்பு
சட்டசபை நடவடிக்கைகளில் உச்சநீதிமன்றம் தலையிடவே கூடாது என்ற நிலை இருக்கும் போது அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது குறித்து விளக்க வேண்டும். அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் இழுபறி நீடிப்பதால் பாஜக மூத்த தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், அரவிந்த் லிம்பாவளி உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து முறையிடுகின்றனர். இதனால் குமாரசாமி அரசுக்கு தற்காலிகமாக ஆபத்து இல்லை என தெரிகிறது.












Click it and Unblock the Notifications