பாஜகவை தேர்தலில் புறக்கணிப்போம்.. வெகுண்டெழுந்த கர்நாடக தமிழர் அமைப்பு.. ஆஹா.. புது சிக்கல்!
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை கர்நாடக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கர்நாடகாவில் சில தொகுதிகள் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நிலையில், கர்நாடக தமிழர்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவற்றில், காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவின் செயலால், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் பாஜகவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டதால் சர்ச்சை : கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில தேர்தல் பாஜக இணை பொறுப்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட கர்நாடகா பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து கருநாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பாஜகவை புறக்கணிக்க வேண்டும் : கருநாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் இராசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிவமொக்கா மாவட்டத்தில் தமிழ் வாக்காளர்களுக்கான பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஒலிபரப்ப விடாமல் தடுத்துள்ளார் பாஜக தலைவர் ஈஸ்வரப்பா. பாஜக தேசிய தலைவரான அவர் கன்னட நாட்டுப்பண் பாடி அதைத் தொடர்ந்து தமிழ்ப்பண் பாட அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால், அவர் தமிழ்த்தாய் வாழ்த்தை இடைநிறுத்தி தடுத்துள்ளார்.

பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவின் இந்த நடவடிக்கையானது பாஜகவின் தமிழர் விரோத போக்கை வெளிப்படுத்துகிறது. வரும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை கர்நாடக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும், தமிழ் மக்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகளை இனம் கண்டு அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications