தமிழகத்துக்கு கர்நாடகா காங். அரசு துரோகம்- காவிரியில் மேகதாது அணை கட்ட நிலம் கையகப்படுத்துகிறதாம்!
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு எதிராக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிலம் கையகப்படுத்தும் பணிகளை கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என குடியரசு தின விழா உரையில் அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி நதியின் குறுக்கே கர்நாடகாவின் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே (கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தொகுதி) மேகதாதுவில் புதியதாக அணை கட்டுவதில் அம்மாநிலத்தில் ஆண்ட பாஜக, ஆளும் காங்கிரஸ் அரசுகள் தீவிரம் காட்டுகின்றன. இதற்கு தமிழ்நாடு அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன.

தமிழ்நாட்டின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது கர்நாடகா அரசு. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரை இத்திட்டத்துக்கு எந்த ஒப்புதலும் தரவில்லை. மத்திய அரசு ஒப்புதல் தராத நிலையிலேயே மேகதாது அணை கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை கர்நாடகா அரசு தொடங்கியது. இதனையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மேகதாது அணையை கட்டி முடிப்போம். பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவைக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது என மீண்டும் கூறியிருந்தார்.
இப்பின்னணியில் குடியரசு தின விழா நேற்று கர்நாடகா தலைநகர் பெங்களூரில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கர்நாடகா மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், மேகதாதுவில் புதிய அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த நிலம் கையகப்படுத்தப்படும். கையகப்படுத்தப்படும் வனத்துறை நிலத்துக்கு இணையாக வேறு நிலம் வழங்கப்படும். இந்த பணிகள் அனைத்துமே தீவிரமாக செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் தொடர்ச்சியான எதிர்ப்பை புறக்கணித்து கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யும் வகையில் மேகதாது அணையை கட்டுவதில் தீவிரம் காட்டுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications