EVM மெஷின்களுக்கு குட்பை.. பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு முறை அறிமுகம்.. தேதி இதுதான்
பெங்களூர்: பெங்களூர் நகரில் உள்ள 5 மாநகராட்சிகளுக்கான தேர்தல் மே மாதம் 25ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் தங்களின் தோல்விக்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சி கூறி வரும் நிலையில் கர்நாடகா அரசு பெங்களூர் மாநகராட்சி தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது.
பெங்களூரில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த அனைத்து தொகுதிகளையும் உள்ளடக்கி பிபிஎம்பி எனும் ஒரு மாநகராட்சி மட்டுமே செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு மாநகராட்சி 5 ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி பெங்களூர் சென்ட்ரல், பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு, பெங்களூர் கிழக்கு, பெங்களூர் மேற்கு என்று 5 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தான் 5 மாநகராட்சிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. பெங்களூர் மாநகராட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூர் மாநகராட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் அதிகாரி நடவடிக்கையை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தான் பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (இவிஎம் இயந்திரம்) பயன்படுத்துவதற்கு பதில் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி கர்நாடகா மாநில தேர்தல் அதிகாரி ஜிஎஸ் சங்ரேஷி கூறியதாவது:
பெங்களூர் மாநகராட்சி தேர்தலை ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி மற்றும் பியூசி தேர்வுகள் விரைவில் வருகிறது. இதனால் அப்போது தேர்தல் நடத்தினால் அது தேர்வை பாதிக்கலாம். இதனால் அந்த தேர்வுகள் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
அதன்படி மே மாதம் 25ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க கர்நாடகா தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுவாக தேர்தலை இவிஎம் இயந்திரம் அல்லது வாக்குச்சீட்டு முறையில் நடத்த சட்டத்தில் இடம் உள்ளது. இதுவரை வாக்குச்சீட்டுக்கு எந்த தேர்தலிலும் தடை விதிக்கப்படவில்லை. பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட உள்ளது. இவிஎம் இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது.
நம் நாட்டில் கிராம பஞ்சாயத்து, கூட்டுறவு சங்கம், எம்எல்சி தேர்தல் உள்ளிட்டவற்றுக்கான தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் முன்னேறிய நாடாக இருக்கும் அமெரிக்காவில் வாக்குச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும். அந்த தேர்தலும் வாக்குச்சீட்டு முறையில் தான் நடத்தப்படும். தேர்தலில் முறைகேடுகளை தவிர்க்க சிசிடிவி கேமரா, வெப்காஸ்டிங் மற்றும் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
பெங்களூர் மாநகராட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி பார்த்தால் பெங்களூரில் 88 லட்சத்து 91 ஆயிரத்து 411 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 45 லட்சத்து 69 ஆயிரத்து 193 ஆக உள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 20 ஆயிரத்து 583 ஆக உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 1,635 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications